எதிர்க்கட்சியினரை பாஜகவுக்கு இழுப்பது பற்றி மோடியிடமே நேராக கேட்ட கார்கே.. என்ன சொன்னாராம் தெரியுமா?
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜக தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி பிரதமர் மோடியிடம், தான் நேரடியாக கேட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். தன்னிடம் பிரதமர் மோடி என்ன சொன்னார் என்பது பற்றியும், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கார்கே பகிர்ந்துள்ளார்.
வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஆளும் பாஜக மிரட்டுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்தாலும் இதையெல்லாம் பாஜக கண்டு கொள்வதில்லை. மாறாக எதிர்க்கட்சியினர் பலரும் பாஜகவில் இணைவது தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறை முதல்வராக இருந்த அசோக் சவானின் முடிவு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான், எதிர்க்கட்சியினரை பாஜக தங்கள் பக்கம் இழுப்பது பற்றி, தான் நேரடியாக பிரதமர் மோடியிடம் கேட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நான் என்ன செய்ய முடியும்: மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கான 2 நாள் மாநில அளவிலான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதில் மல்லிகார்ஜுன கார்கே காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் போது பிரதமர் மோடியிடம் நான் பேசினேன்.
அப்போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என எத்தனை பேரை நீங்கள் வேட்டையாடி (கட்சிக்கு இழுப்பது) பாஜகவில் சேர்க்க போகிறீங்க எனக் கேட்டேன். இதற்கு பதிலளித்த மோடி, எதிர்க்கட்சியினர் பாஜகவில் சேர விரும்பும் பட்சத்தில் நான் என்ன செய்ய முடியும். அப்போது நான், எதிர்க்கட்சிகளை பயமுறுத்தி இதை செய்கிறீகள் என்று மோடியிடம் சொன்னேன்.
பயப்பட்டால் அழிந்து போவோம்: இதற்கு அரசின் பணிகளை பார்த்து தங்களுடன் அவர்கள் இணைகிறார்கள்.. என்று பதிலளித்தார். வேறு கட்சிக்கு ஓடிப்போவது கோழைத்தனமான செயலை தவிர வேறு எதுவும் இல்லை" என்றார். தொடர்ந்து பேசிய கார்கே கூறியதாவது:- இதற்கெல்லாம் நாம் பயப்பட வேண்டியது இல்லை. பயப்பட்டால் அழிந்து போவோம். ஆனால், நாம் போராடினால் ஒருநாள் வெற்றி நமக்கு கிட்டும். நீங்கள் அனைவரும் இதற்கு தயாராக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கபப்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications