சர்ச்சை! உத்தரகண்ட் சுரங்க மீட்பு பணி! ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சருக்கு "சிவப்பு" கம்பள வரவேற்பு
டெல்லி: உத்தரகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அங்கே சென்றுள்ள அமைச்சர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சில்கியாரா என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், சுமார் 40 தொழிலாளர்கள் அப்படியே உள்ளே சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 190 மணி நேரத்தைக் கடந்து 9ஆவது நாளாகத் தொடர்கிறது. உள்ளே இருப்பவர்களுக்கு மிகக் குறைந்த உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே இருக்கிறது.
நாட்கள் செல்ல செல்ல அவர்கள் உடல்நலம் மோசமாகும் என்று கவலை எழுந்துள்ளது. இதுவரை தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. மேலும், மீட்புப் பணிகளின் போது கூடுதலாக மண் சரிவு ஏற்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் மீட்புப் படையினர் அதிலும் கவனமாக இருக்கிறார்கள்.
சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு அவர்களை மீட்கும் திட்டத்தை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், இன்று அமைச்சர் நேரடியாக மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
அதாவது மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் கட்கரி, முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் அங்கே வந்துள்ள நிலையில், அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் சேர்களுக்கு கவர் போடப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக பந்தலையும் புதிதாக அமைத்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதைக் கவனிக்காமல் இப்படி அமைச்சர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் பலரும் சாடிவருகின்றனர். இது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications