அதிகாலையில் பரபரப்பு! டெல்லி செங்கோட்டையில் "டம்மி" வெடிகுண்டுகள்..7 பேர் சஸ்பெண்ட்! என்ன நடந்தது
டெல்லி: நாட்டின் தலைநகர் செங்கோட்டையில் அடுத்த வாரம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையில் (Red Fort Security issue) போலி வெடிகுண்டுகள் செங்கோட்டைக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. எப்போதும் சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவார். மேலும், அங்கிருந்தபடி அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.

இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஒரு குழுவுடன் போலி வெடிகுண்டுகளைக் கோட்டைக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். போலீஸ் கெடுபிடிகளைத் தாண்டி போலி வெடிகுண்டுகள் எடுத்து செல்லப்பட்டனர். இந்த பயிற்சி இன்று காலை நடந்துள்ளது.
செங்கோட்டையில் பாதுகாப்பு குறைபாட்டிற்காக பணியிலிருந்த ஏழு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டிசிபி ராஜா பந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை செங்கோட்டையில் இருந்து தான் ஏற்றி, உரையாற்றுவார். இதனால் சுதந்திர தினத்திற்கு முன்னதாக செங்கோட்டை உயர் பாதுகாப்பு மண்டலமாக இருக்கும்.. இந்த நிகழ்வில் பிரதமர் தொடங்கிப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்படிப்பட்ட முக்கியமான இடத்தில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக்கூடாது. சிறு பாதுகாப்பு குறைபாடும் இருக்கவே கூடாது. இதனால் இங்குப் பாதுகாப்பு மீறல் மிகவும் தீவிரமானதாகவே கருதப்படும்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை வங்கதேசத்தைச் சேர்ந்த செங்கோட்டைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது பிடிபட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "அவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள்; செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயன்றனர்" என்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் ஆவர்.
அவர்களிடமிருந்து சில வங்கதேச ஆவணங்களும், போலியான ஆதார் அட்டைகளும் மீட்கப்பட்டன. தற்போது அவர்கள் விசாரிக்கப்பட்டு, தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகஸ்ட் 15-ஐ முன்னிட்டு செங்கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications