நாட்டை என்ன பண்ணி வெச்சிருக்கீங்க? மத மோதலால் அவமானம்- இது காந்தியின் இந்தியா: மன்மோகன் சிங் ஆவேசம்
டெல்லி: மக்களிடையே வெறுப்பை தூண்டிவிட்டு ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்கள் அழிவை நோக்கிய அவமானகரமான சரிவை தரும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் இந்தியா ஆற்றி வரும் பங்கு குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கட்டுரை எழுதி இருக்கிறார்.

அதில், "வன்முறையால் ஏற்படக்கூடிய மனித உயிரிழப்புகள் வருந்தத்தக்கவை என்றும், அதை நிச்சயம் தவிர்த்து இருக்க வேண்டும் எனவும், அதற்கு என்ன காரணம் சொன்னாலும் ஏற்க முடியாது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்து இருப்பதாவது, "மகாத்மா காந்தியின் தேசம் இந்தியா. உள்நாட்டிலும் உலகளவிலும் இந்தியா அமைதியின் தூதராகவும் அகிம்சையின் தூதராகவும் இருக்க வேண்டும். இந்தியா உள்நாட்டில் நிலவும் சமூக சமநிலையை பராமரிக்க வேண்டும். வகுப்புவாத எழுச்சியை முதலில் தடுக்க வேண்டும். அதுவே தற்போது அவசியமானது.
உலகம் மாறி வருகிறது. இந்த சூழலில் இந்தியா மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருக்க வேண்டும் எனில், லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் இருப்பது அவசியம். அத்தகைய ஆலைகள் இயங்க அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த அனைத்து மதங்கள் மற்றும் சாதிகளை உள்ளடக்கிய மக்கள் வேண்டும். அவர்களை இணைத்து செயல்பட வேண்டியது கட்டாயம்.
பொருளாதார செழிப்பு கொண்ட மாளிகையை கட்டியெழுப்புவது சமூக நல்லிணக்கம்தான். இந்தியாவின் குடிமக்களிடையே அவநம்பிக்கையையும் கோபத்தையும் தூண்டி விட்டு சமூக ஒற்றுமை குலைக்கப்படுகிறது. அழிவை நோக்கிய அவமானகரமான சரிவையே இதுபோன்ற செயல்கள் தரும்." என அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications