உச்சக்கட்ட குழப்பம்! "அது இந்திய விமானம் இல்லை!" ஆப்கான் விமானம் விபத்து.. மத்திய அரசு பரபர விளக்கம்
டெல்லி: இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் நாட்டில் விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
பொதுவாக மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமான போக்குவரத்து பாதுகாப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அங்கே பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு அம்சங்கள் இருப்பதே இதற்குக் காரணமாகும்.

இருப்பினும், அதையும் தாண்டி அவ்வப்போது விமான விபத்துகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான விபத்தில் இந்திய விமானம் சிக்கியதாக இன்று பிற்பகல் தகவல் வெளியானது.
வெளியான தகவல்: இந்தியாவில் இருந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டில் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியானது. ஆப்கானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.
பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விமானம் விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. அதேநேரம் இந்த விமானம் எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறித்த தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
விளக்கம்: இதற்கிடையே இந்த விபத்து குறித்து மத்திய சிவில் ஏவியேஷன் துறை அமைச்சகம் முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது இந்த விபத்தில் சிக்கியது இந்திய விமானம் இல்லை என்றும் அது இந்தியாவில் இருந்து சென்ற விமானம் இல்லை என்றும் ஏவியேஷன் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. இதற்கிடையே இந்த விபத்து குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து சிவில் ஏவியேஷன் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆப்கானிஸ்தானில் இப்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில் இந்திய விமானம் சிக்கவில்லை. அது இந்தியப் பயணிகள் விமானமும் இல்லை.. சிறப்பு சாட்டர் விமானமும் இல்லை" என்று விளக்கம் தரப்பட்டது. இந்த விபத்தில் சிக்கியது இந்திய விமானம் இல்லை என்பது தெரிந்த பின்னரே இந்தியர்கள் ஆறுதல் அடைந்தனர்.
விபத்தில் சிக்கியது எந்த விமானம்: அதாவது இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறிய சார்ட்டர் ஜெட் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் மீது பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து மறைந்தது. இது குறித்து ஆப்கான் அதிகாரிகள் ரஷ்ய விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மாறாக அது ரஷ்யாவுக்குச் சொந்தமான விமானாகும். பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட டசால்ட் பால்கன் 10 ரக விமானம் இதுவாகும். அந்த விமானம் எந்தவொரு இந்திய நிறுவனத்திற்கும் சொந்தமானது இல்லை. அது ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டதாகும்.. இருப்பினும், அது இந்தியாவில் இருந்து சென்றதால் அந்நாட்டு ஊடகங்கள் அதை இந்திய விமானம் என்று நினைத்துக் கொண்டன.
அந்த விமானத்தில் நான்கு பணியாளர்கள் மற்றும் இரண்டு பயணிகள் உட்பட ஆறு பேர் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள படாக்ஷானின் மலைப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் மலையில் மோதி இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இந்த விபத்திற்கு என்ன காரணம், உயிரிழந்தோர் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications