சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என்பதா? அமித்ஷாவுக்கு எதிராக கொந்தளித்த முன்னாள் நீதிபதிகள்!
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு எதிராக, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகிறார்கள். இருவரும் துணை ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தருமாறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்கள்.

அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில்தான், இந்தியா கூட்டணி சார்பாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என அமித்ஷா விமர்சித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ''இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் நீதிபதி சுதரசன் ரெட்டியை, துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தி உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கண்டனம்
சுதர்சன் ரெட்டி நீதிபதியாக இருந்தபோது சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர். அவர் மட்டும் அப்படி ஒரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டிலேயே நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டு இருப்பார்கள். நக்சலைட்டுகளை ஆதரிக்க உச்ச நீதிமன்றம் போன்ற உயர் அமைப்பை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டவர்தான் சுதர்சன் ரெட்டி" என விமர்சித்து இருந்தார்.
அமித்ஷாவின் இந்த விமர்சனத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 18 பேர் கொண்ட குழு கையெழுத்திட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சுதர்சன் ரெட்டி மீதான அமித்ஷாவின் விமர்சனம் துரதிர்ஷ்டவசமானது.
நீதித்துறையின் சுதந்திரத்தையே உலுக்கும்
சல்வா ஜூடும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக புரிந்து கொண்ட அமித்ஷாவின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. தீர்ப்பில் எங்கும் நக்சலைட்டுகள் அல்லது அவர்களின் சித்தாந்தத்தை ஆதரிக்கவில்லை. இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கான பிரசாரம் சித்தாந்த ரீதியாக இருக்கலாம். ஆனால் அதை நாகரிகமாகவும், கண்ணியமாகவும் நடத்த வேண்டும்.
எந்தவொரு வேட்பாளரின் சித்தாந்தத்தையும் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு உயர் அரசியல் தலைவர் தவறாக விமர்சிப்பது, நீதிபதிகள் மீது அதிர்ச்சியூட்டும் விளைவை ஏற்படுத்தும். நீதித்துறையின் சுதந்திரத்தையே உலுக்கும். இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவதூறுகளை கூறுவதை தவிர்ப்பது புத்திசாலித்தனம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதர்சன் ரெட்டி அளித்த தீர்ப்பு என்ன?
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நீதிபதியாக இருந்த சுதர்சன் ரெட்டி, சல்வா ஜுடும் அமைப்பு சட்ட விரோதமானது என தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த அமைப்பு, உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது, அவருடன் இருந்த நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார் என்பவரும் சேர்ந்து இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார். இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டியே அமித்ஷா விமர்சனம் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications