100 நாள் வேலை-மத்திய பாஜக அரசு தர வேண்டிய ரூ.1,056 கோடி- நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு!
டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (100 நாள் வேலை திட்டம்) மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி கடந்த 13.01.2025 அன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இன்று, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் இணைந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவண செய்யுமாறு வலியுறுத்தினோம்.
இதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 27.11.2024 முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவை தொகையான ரூ. 1.635 கோடியினை உடனடியாக விடுவிக்கக் கோரியும், 2024-25 ஆம் ஆண்டிற்கு கூடுதல் மனித சக்தி நாட்களுக்கு ஒப்புதல் வழங்கவும், தமிழ்நாட்டில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தொடர்ந்து ஆதரவு வழங்கிட கோரியும், டெல்லியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்தோம்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஒன்றிய ஊரக வளர்ச்சி இணைச் செயலளார் ரோகிணி ஆர். பாஜிபாகரே ஆகியோர் உடனிருந்தனர் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications