"ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை.." பாகிஸ்தான் உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை! ஜெய்சங்கர் திட்டவட்டம்
டெல்லி: எல்லையில் அமைதியை ஏற்படுத்தப் பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் வன்முறை தொடர்பான பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்காத வரை இந்தியா இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் அவர் கூறினார்..
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல காலங்களாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முயலும் போதெல்லாம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது.

அமைச்சர் ஜெய்சங்கர்: மும்பை தாக்குதல் தொடங்கி இதில் நல விஷயங்களை நம்மால் இதில் உதாரணமாகச் சொல்ல முடியும். இதற்கிடையே டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய சில கருத்துகள் முக்கியத்துவம் பெற்றது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், எல்லையில் என்ன நடந்தாலும் அதைச் சரி செய்ய இந்தியா தயாராகவே உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வாரம் டெல்லியில் நடந்த ஒரு தனியார் நிகழ்வில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். மேலும் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கும் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
திட்டவட்டம்: இந்தியா பாக். உறவு குறித்துப் பேசிய அவர், "இங்கே பிரச்சினை என்னவென்றால் பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவு என்பதிலேயே குழப்பம் இருக்கிறது. தற்போது இருப்பது போலவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இருக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறதா என்று நீங்கள் கேட்டால்.. அதற்கு ஆம், இல்லை என இரண்டு பதிலும் பொருந்தும்.
அதற்காக இந்தியா என்ன நடந்தாலும் அமைதியாக இருக்கும் என நான் சொல்லவில்லை. பாசிட்டிவாகவே இல்லை நெகடிவ்வாகவோ எப்படி இருந்தாலும் நாங்கல் எதிர்வினையாற்றுவோம்" என்றார். அதாவது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்திய சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் எல்லையில் இருக்கும் சூழலுக்கு ஏற்ப தக்க பதிலடியை இந்தியா தரும் என்பதே ஜெய்சங்கர் பதிலாக இருக்கிறது.
இந்தியா- பாக். மோதல்: ஜம்மு காஷ்மீர் எல்லை மோதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே நாம் விடுதலை பெற்ற போதில் இருந்தே மோதல் நிலவி வருகிறது. அதேநேரம் இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களைப் பாகிஸ்தான் நடத்தியும் பயங்கரவாத செயல்களை ஊக்குவித்தும் வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்ற போது கூட இது குறித்து விரிவாகப் பேசியிருந்தார்.
சிங்கப்பூரில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "தொழில்துறையினருக்கு எப்படி ஒரு நாடு ஆதரவு அளிக்குமோ.. கிட்டதட்ட அதேபோல பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரிப்போம் என்று வெளிப்படையான நிலைப்பாடு எடுத்துள்ள ஒரு அண்டை நாட்டை எப்படி தான் எதிர்கொள்ள முடியும். இது ஏதோ ஒரு முறை இல்லை. காலங்காலமாக அவர்கள் இதையே தான் செய்து வருகிறார்கள்.
பதிலடி இருக்கும்: இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர என்னிடம் உடனடி தீர்வு இல்லை... ஆனால் நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இனி இந்தியா இந்தப் பிரச்சனையைத் தவிர்க்காது. சரி நடந்தது நடந்துவிட்டது பேச்சுவார்த்தையைத் தொடரலாம் எனச் சொல்லப்போவது இல்லை . ஒவ்வொரு விஷயத்திற்கும் தக்க பதில் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
காஷ்மீரில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். என்ன நடந்தாலும் பேச்சுவார்த்தை தொடருவோம் என்று இந்தியா இனியும் இருக்காது என்று சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர், பாக். எல்லையில் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களையும் பட்டியலிட்டார்.












Click it and Unblock the Notifications