கணவர் மரணத்தில் திமுக தலைவர்களுக்கு தொடர்பு.. ஜனாதிபதியிடம் சாதிக் பாட்சா மனைவி திடீர் புகார்
Recommended Video

டெல்லி: "என் கணவர் மரணத்தில் திமுக தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படுகிறேன். அதனால் அவர்களையும் விசாரியுங்கள்" என்று சாதிக் பாட்சா மனைவி ஜனாதிபதியிடமே நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர். அதாவது ஆ.ராசாவின் பினாமி தான் சாதிக் பாட்சா என்ற அளவுக்கு இருவரும் அவ்வளவு நெருக்கம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சாட்சியாகவும் இருந்தவர். சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இவர் கொண்டு வரப்பட்டபோது அப்ரூவராக மாறுவதாக ஒரு தகவல் வெளியானது.

தற்கொலை
ஆனால் மர்மமான முறையில் சாதிக் பாட்சா மரணம் அடைந்தார். தூக்கில் பிணமாக தொங்கியவரை மீட்டு, தற்கொலை என்று கேஸ் மூடப்பட்டது. ஆனால், மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அந்த குடும்பத்தினர் தொடர்ந்து சொல்லி கொண்டு வருகிறார்கள்.

ஜனாதிபதி
இந்நிலையில், கடந்த மார்ச் 19-ம் தேதி சாதிக்கின் மனைவி ரேஹா பானு காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து ரேஹா பானு, ஜனாதிபதியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், தன் கணவரின் மர்ம மரணத்தை திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மர்ம மரணம்
அதில், "என் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள்தான் என் கணவரின் இறப்புக்கும் காரணமாக இருக்க வேண்டும். என் கணவரின் மர்ம மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க வேண்டும். என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தீர விசாரித்தாலே, இதன் பின்புலத்தில் உள்ள அரசியல் சக்திகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

முக ஸ்டாலின்
2ஜி வழக்கு விசாரணையின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு என் கணவர் சில தகவல்களைக் கூறினார். அதை அடிப்படையாக வைத்து விசாரணையை மேற்கொண்டால், என் கணவரின் இறப்புக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க உதவுவீர்கள் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பகிரங்க பெயர்
இப்படி தேர்தல் சமயத்தில், திமுக தலைவர்களை சம்பந்தப்படுத்தி ரேஹா பானு புகார் அளித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் திமுக தலைவர்களின் பெயர்களை பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியையும், இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications