காவிரி மேலாண்மை ஆணையம்.. முழு நேரத் தலைவர் நியமனம்.. இனியாவது சிக்கல்கள் தீருமா?
டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ர குமார் ஹல்தரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடைய பல ஆண்டுகளாகவே சிக்கல் இருந்து வருகிறது.
இதிலுள்ள பிரச்சினைகளைச் சரி செய்யும் வகையில் புதிய செயல் திட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம்
இதையடுத்து மத்திய அரசு கடந்த 2018 மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. 9 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இந்த ஆணையம், மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் தொடர்பாக ஏற்படும் அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இந்த ஆணையத்தின் தலைவராக மசூத் உசேன் செயல்பட்டு வந்தார்.

மத்திய அரசு உத்தரவு
இவர் கடந்த 2019இல் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஏ கே சின்ஹா நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு எஸ்.கே. ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் சவுமித்ர குமார் ஹல்தரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.கே. ஹல்தர்
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே. ஹல்தரை நியமனம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராகச் செயல்படுவார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது பொறுப்பேற்பார்
எஸ்.கே. ஹல்தர் இப்போது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ளார். இவர் வரும் நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதன் பிறகு இவர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பை ஏற்பார் எனக் கூறப்படுகிறது. முழு நேரத் தலைவர் நியமனத்திற்குப் பிறகாவது நதி நீர் பங்கீட்டில் இருக்கும் சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications