மத்திய அரசு அடம்- சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக முடியாத முரளிதர் ராவ் இனி உச்சநீதிமன்ற நீதிபதி?
டெல்லி: மத்திய பாஜக அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடித்ததால் தமிழ்நாட்டை சேர்ந்த, ஒடிஷா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கொலிஜியம் குழுவின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் நீதிபதி முரளிதர், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் பட்டியலில் இடம்பெறுபவர் நீதிபதி முரளிதர். 1984-ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர் இனப்படுகொலை வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தவர் நீதிபதி முரளி. கடந்த 2020-ம் ஆண்டு சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் உச்சகட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது டெல்லியில் வன்முறை வெடித்தது. அமைதி வழியிலான சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை இந்துத்துவா சக்திகள் சீர்குலைக்கும் வகையில் வன்முறைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். அப்போது நீதிபதி முரளிதர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, டெல்லி போலீஸ் ஏன் அமைதியாக இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை விசாரித்து பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவை பிறப்பித்த மறுநாளே நீதிபதி முரளிதர், பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால் வழக்கமான இடமாறுதல் என மத்திய அரசு சார்பில் சமாளிக்கப்பட்டுவிட்டது.
பின்னர் ஒடிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் முரளிதர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முரளிதரை கொலிஜியம் குழு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. கொலிஜியத்தின் பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, நீதிபதி முரளிதர் இடம் மாற்ற பரிந்துரையை கிடப்பில் போட்டது.
பின்னர் வேறுவழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலாவை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் கங்காபூர்வாலா. அத்துடன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதரை நியமிக்கும் பரிந்துரையையும் கொலிஜியம் திருமபப் பெற்றது.
தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் சிலர் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் நீதிபதி முரளிதர் உள்ளிட்ட சிலர், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இடம் மாற்றம் செய்யப்படலாம் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன்.












Click it and Unblock the Notifications