மாதவிலக்கு லீவு.. கட்டாயமாக்கினால் பெண்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் - உச்சநீதிமன்றம்
டெல்லி: அனைத்து நிறுவனங்களிலும், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும், மனுதாரரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, மாதவிடாய் விடுப்பு கொள்கையை வகுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிமன்றம், ஷைலேந்திர மணி திரிபாதியின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியது. எந்த ஒரு பெண்ணும் தங்கள் சார்பில் நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மாதவிடாய் விடுப்பின் எதிர்மறை விளைவுகள்
மாதவிடாய் விடுப்பு பெண்களின் வேலைவாய்ப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இதனால் முதலாளிகள் பெண்களைப் பணியமர்த்துவதைத் தவிர்க்கலாம் என்றும், அது வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பைப் பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
முதல் மனு பிப்ரவரி 2023 இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டார். பின்னர் பதிலளிக்கவில்லை என்று கூறி 2024 இல் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனு ஜூலை 2024 இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
மனுதாரரின் கோரிக்கைகள்
தற்போதைய மனுவில், மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரினார். மேலும், அரசியலமைப்பின் பிரிவுகளின்படி தேவைப்படும் நிவாரணங்களை வழங்குவதற்கான சட்டம்/கொள்கைகள்/அரசு ஆணைகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“மாதத்திற்கு ஒருமுறை விடுப்பு எடுக்கும் உரிமை, முழு தனியார் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தலைமை நீதிபதி காந்த் கூறினார். இது பெண்களின் வளர்ச்சிக்குப் தீங்கு விளைவிக்கும். பணியிடத்தில் என்ன மாதிரியான மனநிலை உருவாகும் என்று உங்களுக்குத் தெரியாது என்றும் அவர் எச்சரித்தார்.
மனுதாரர் தரப்பு வாதங்கள்
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத், கர்நாடக அரசு மட்டுமே மாதவிடாய் விடுப்புக் கொள்கையை வகுத்துள்ளது என்றார். ஒடிசா 1992 முதல் இத்தகைய கொள்கையைக் கொண்டிருப்பதாகவும், பல தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து மாதவிடாய் விடுப்பை அனுமதிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
“அவர்கள் தாமாக முன்வந்து கொடுக்கிறார்கள் என்றால், அது சிறந்தது. ஆனால் நீங்கள் அதைச் சட்டப்பூர்வமாக ஒரு கட்டாய நிபந்தனையாக அறிமுகப்படுத்தினால், அது பெண்களின் வாழ்க்கைக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியாது” என்று தலைமை நீதிபதி காந்த் உறுதியுடன் தெரிவித்தார். பின்னர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications