கெத்தாக அதிமுக ஆபீசுக்குள் இபிஎஸ்! சாவி கொத்துக்காக டெல்லியில் அல்லாடும் ஓபிஎஸ்- செப்.12-ல் விசாரணை!
டெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது செப்டம்பர் 12-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 22-ந் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்புமே பங்கேற்றனர். ஆனால் இருதரப்பினரிடையே முரண்பாடுகள், மோதல்கள் இருந்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் ஜூலை 11-ந் தேதி புதிய பொதுக்குழு நடைபெறும் என இபிஎஸ் தரப்பு தன்னிச்சையாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் இரு அணிகளாக அதிகாரப்பூர்வமாக பிரிந்தன.
அதிமுகவின் இபிஎஸ் அணி, சென்னை வானகரத்தில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியது. அதேநாளில் ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சென்றார். அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் வன்முறை வெடித்தது. இருதரப்பும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்தது.

ஆபீசில் கொள்ளை அடித்ததாக புகார்
இந்த வன்முறைக்கு நடுவே அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது ஓபிஎஸ் கோஷ்டி. பின்னர் அங்கிருந்து ஏராளமான பொருட்களை அள்ளிச் சென்றது. இதனால் அதிமுக அலுவலகம் கொள்ளையடிக்கப்பட்டது போல காட்சி தந்து. இதையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வந்த இபிஎஸ் அணி அதிர்ச்சியடைந்த நிலையில் போலீசில் புகார் கொடுத்தது. அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் அணி கொள்ளையடித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைகோர்ட் கொடுத்த தீர்ப்பு
இதனால் பதற்றத்தை தணிகக்வும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதிமுக தலைமை அலுவலகக் கட்டிடமானது மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் சென்றது. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் அதிமுக அலுவலக சீலை அகற்றி, சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பு அளித்தார்.

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்
இத்தீர்ப்பின் அடிப்படையில் இபிஎஸ் தரப்பிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 72 நாட்களுக்குப் பின்னர் இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்). அவருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கோஷ்டி கொள்ளையடித்தது; அதிமுக அலுவலகத்துக்கு ரவுடிகளை கூட்டி வந்தார் ஓபிஎஸ் என சரமாரியாக சாடினார்.

செப்.12-ல் விசாரணை
இதனிடையே அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது பதிலளிக்க ஏற்கனவே இபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது இந்த மேல்முறையீட்டு வழக்கு வரும் திங்கள்கிழமையன்று அதாவது செப்டம்பர் 12-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications