ரூ.8 கோடி பறிமுதல்.. பாஜக எம்எல்ஏவை கைது செய்யாதது ஏன்? பிரதமர் மோடியை சீண்டிய கெஜ்ரிவால்
டெல்லி: எதுவுமே பறிமுதல் செய்யப்படாத நிலையிலும் மணிஷ் சிசோடியாவை கைது செய்த மத்திய பாஜக அரசு, கர்நாடகாவில் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏவை பாஜக அரசு ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் மாடால் விருபாக்ஷப்பா. தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தொகுதி எம்.எல்.வாக இருக்கும் இவர், கர்நாடக அரசின் மைசூரு சோப் வாரிய தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இவரது மகன் பிரசாந்த் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ரூ.40 லட்சம் லஞ்சம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த், காண்ட்ராக்டர் ஒருவரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது அவரை கையும்-களவுமாக லோக் அயுக்தா அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கியது. எம்.எல்.ஏவின் மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகா மட்டும் இன்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாடால் விருபாக்ஷப்பாக்கு ஜாமீன்
விரைவில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியாக இது அமைந்தது. மாடால் விருபாக்ஷப்பா இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். மாடால் விருபாக்ஷப்பா வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே இந்த வழக்கில் இருந்து தான் கைது செய்யப்பட்டாமல் இருக்க மாடால் விருபாக்ஷப்பா முன் ஜாமீன் கோரி கோர்டில் முறையிட்டார். அவருக்கு கோர்ட்டும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்
இந்த நிலையில், இந்த விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மணிஷ் சிசோடியா இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை என அனைத்து அமைப்புகளையும் ஏவி விட்ட பிறகு மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

உங்களிடம் இருந்தே வருகிறார்கள்
ஆனால் உங்கள் கட்சி எம்.எல்.ஏவிடம் இருந்து இவ்வளவு தொகை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? " என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் கடைசியாக ஒருவரியில் பிரதமர் மோடியை மீண்டும் சாடியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இனி ஊழலை எதிர்த்து போராடுவது பற்றி ஒருபோதும் பேச வேண்டாம். அதே தவறை செய்பவர்கள் உங்களிடம் இருந்தே வருகிறார்கள்" என்றும் பதிவிட்டுள்ளார்.

விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்
முன்னதாக கடந்த சனிக்கிழமை கெஜ்ரிவால் எம்.எல்.ஏ மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விமர்சித்து இருந்தார். அப்போது, பாஜக எம்.எல்.ஏவின் மகனுக்கு பத்ம பூஷண் விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான், பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்படாமல் இருப்பதாக கூறி கெஜ்ரிவால் விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications