"இது ரொம்ப தப்பு.." அயோத்தி ராமர் கோயிலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது! காங். மூத்த தலைவர் பரபர
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் காங்கிரஸ் கலந்து கொள்ளாத நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ராமர் பிறந்த இடமாக நம்பப்படும் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரமதர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்விற்காக அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து இருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ராமர் இந்தியாவின் ஆன்மா என்றும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என்ற முடிவு துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது துரதிர்ஷ்டவசமானது. ஒரு கிறிஸ்தவரோ அல்லது பாதிரியாரோ அல்லது முஸ்லிமோ கூட ராமரின் அழைப்பை நிராகரிக்க முடியாது. ராமர் இந்தியாவின் ஆன்மா. ராமர் இல்லாமல் இந்தியாவைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
ரொம்ப தப்பு: அழைப்பை நிராகரிப்பது என்பது இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை அவமதிப்பது பேன்றதாகும். இது இந்தியாவின் பெருமைக்கும் இருப்புக்கும் சவால் விடுவது போன்ற ஒரு செயல். அனைத்து எதிர்க்கட்சிகளையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன், பாஜகவை எதிர்த்துப் போராடுங்கள், ஆனால் ராமரை எதிர்த்து இல்லை. பாஜகவை எதிர்த்துப் போராடுங்கள் ஆனால் சனாதனத்தை அல்ல. பாஜகவை எதிர்த்துப் போராடுங்கள், ஆனால் இந்தியாவை எதிர்த்துப் போராட வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.
அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வு ஆன்மீக நிகழ்வாக இல்லாமல் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்வாக இருப்பதால் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் சொல்வது என்ன: இது தொடர்பாகக் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது நாட்டில் லட்சக்கணக்கானோர் ராமரை வழிபடுகிறார்கள், மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ்/ பாஜக நீண்ட காலமாக அயோத்தியில் கோவிலை அரசியல் திட்டமாக உருவாக்கி வருகிறது. முழுமையடையாத கோயிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைக்கிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இப்படிச் செய்கிறார்கள்" என்றனர்.
காங்கிரஸ் மட்டுமின்றி ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், திறப்பு விழா முடிந்ததும் அயோத்தி செல்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications