டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட அண்ணா -கலைஞர் அறிவாலயம்! ஏ டூ இசட் ஏற்பாடுகள்! பின்னணியில் யார்?
டெல்லி: டெல்லியில் அண்ணா -கலைஞர் அறிவாலயம் நேற்று திறப்பு விழா கண்ட நிலையில், அதற்காக அங்கு பல மாதங்களாக பார்த்து பார்த்து பணிகளை செய்தவர்களில் திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளர் அண்ணா நகர் கார்த்திக்கும் ஒருவர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மன ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப கட்டிடத்தின் டிசைனை உருவாக்கியது முதல் உள் அலங்கார வேலைப்பாடுகள் வரை மெனக்கெட்டு செயல்பட்டிருக்கிறார் அவர்.
இவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தாலும் கூட சபரீசனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் அலுவலகம்
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா -கலைஞர் அறிவாலயத்தின் கலை நுணுக்கமான கட்டுமானப் பணியின் பின்னணியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் அண்ணா நகர் கார்த்திக் முக்கிய பங்கு வகிக்கிறார். பல மாதங்களாக கட்டிடத்தை கலை நுணுக்க வேலைபாடுகளுடன் செதுக்கி முதலமைச்சரின் ஸ்டாலினின் மனதிற்கு பிடித்தாற்போல் வடிவமைத்துக் கொடுத்து அவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

கலை நுணுக்கம்
குறிப்பாக இரவு நேரத்தின் போது ஒளிரவிடப்பட்டும் விளக்குகள் கட்டிடத்தின் அழகை மேலும் மெருகேற்றி அரச மாளிகையை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது அண்ணா -கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. கூட்ட அரங்கம், நூலகம், என கட்டிடத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கலை நுணுக்கம் வெளிப்படுவதை காண முடிகிறது.

விழா ஏற்பாடுகள்
அதேபோல் அண்ணா -கலைஞர் அறிவாலயத்தின் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுகவின் ஆஸ்தான மாநாடு பந்தல் அமைப்பாளரான பந்தல் சிவா கவனித்துக்கொண்டார். வாழைமரங்களையும், தோரணங்களையும் கட்டி அங்கு சென்றவர்களை நாம் இருப்பது டெல்லியிலா இல்லை தமிழகத்திலா என யோசிக்க வைக்கும் அளவுக்கு அங்கு பிரம்மாண்டம் காட்டியிருந்தார் பந்தல் சிவா. ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் போன்ற தேசியத் தலைவர்கள் பலரது கவனத்தை இது ஈர்த்திருந்தது.

அமைச்சர் எ.வ.வேலு
இதனிடையே அமைச்சர் எ.வ.வேலுவும் டெல்லியில் அமைந்துள்ள திமுக அலுவலகத்திற்காக சிரமேற்கொண்டு பல்வேறு பொறுப்புகளை கவனித்துக்கொண்டார். கட்டிட கட்டுமாணப் பணிகளை தொடர்ந்து கேட்டறிந்து அதனை விரைவுப்படுத்தி முடித்ததில் அவருக்கும் பங்குண்டு. மொத்தத்தில் கருணாநிதி காலத்தில் கூட நிகழாத ஒரு காரியத்தை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் எனக் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications