கலகலக்கும் காங்கிரஸ்... என்ன செய்யலாம்.. எப்படி சமாளிக்கலாம்.. சோனியா அவசர ஆலோசனை
கட்சியின் அதிருப்தி தலைவர்களை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோனை நடத்தி வருகிறார். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது பற்றி, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மூத்த தலைவர்களுடன் இந்த ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வருடம் 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி அந்த பதவியை உடனே ராஜினாமா செய்தார்... எனவே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக, சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
ஆனால், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் தோல்வியை கண்டு துவண்டுபோன கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சி தலைமைக்கு ஒரு கடிதம் எழுதினர்..

நியமனம்
அதில் கட்சியில் அதிரடியான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், முழுநேர நிலையான தலைவர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். எனினும், இந்த கடிதத்திற்கு சோனியா எந்தவித பதிலும் தரவில்லை.. இந்த சூழ்நிலையில்தான், அதிருப்தி தலைவர்களை சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.. அதன்படியே இன்று அந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிருப்தி தலைவர்கள்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஏற்பாடு செய்திருக்கும் இந்த கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களான மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சோனியா காந்தி
இவர்கள் தவிர முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோரும் சோனியா காந்தியைச் சந்திக்க அழைக்கப்பட்டிருந்தனர். நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வரும் ஜனவரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. அந்த கட்சியில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் சோனியா ஆலோசனை மேற்கொள்வார் என தெரிகிறது.

கூட்டணி
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருஷம் ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது... இந்த மாநிலங்களில் எந்தெந்தக் கட்சியுடன் கூட்டணி பேச்சு நடத்தலாம், கூட்டணியை உறுதி செய்யலாம் என்பது குறித்து சோனியாவுடன் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசிப்பார்கள் என தெரிகிறது. அதேபோல, தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்ந்து வருகிறது என்றாலும், வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன... அதனால் அதுகுறித்தும் கூட்டத்தின் இறுதியில் பேசப்படலாம் என தெரிகிறது.

மத்திய அரசு
மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது, அடுத்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், பீகார் மற்றும் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸின் பின்னடைவு, வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவது, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

லாக்டவுன்
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.. லாக்டவுனுக்கு பிறகு சோனியா, இப்போதுதான் மூத்த தலைவர்களை முதன்முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.. இவ்வளவு நாள் வீடியோ கான்பரன்ஸ் மூலமே நிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில், இந்த நேரடி ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்து வரும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டமானது, நொடிந்து போய் இருக்கும் கட்சியில் மிகப்பெரிய மாற்றத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications