கொரோனா : ஏழைகளின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ. 6000 செலுத்துங்கள் - மோடிக்கு கடிதம் எழுதிய சோனியா
தகுதியுள்ள அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.6000 செலுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: இரவு நேர ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 6,000 செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. தினசரியும் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 12 லட்சம் பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், ஒடிஷா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும், தடுப்பூசிகளை தங்களது மாநிலத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு லோக்சபா தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தி இருந்தார்.
கொரோனா பாதிப்பு குறித்து காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி அக்கட்சி ஆளும் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பை நீக்க வேண்டும். விருப்பப்படும் அனைவருக்கும் அவரவர் விருப்பத்தின் பேரில் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல தடையற்ற போக்குவரத்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
வென்டிலேட்டர்கள், ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications