மதுபான கொள்கை.. கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ.. டெல்லியில் திங்களன்று சட்டசபை சிறப்பு கூட்டம்
டெல்லி: மதுக்கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் ஜெக்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து விவாதிக்க வரும் திங்கள்கிழமை டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்தாண்டு புது மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. அங்கே அரசு மட்டுமே மது விற்பனை செய்து வந்த நிலையில், புது கொள்கையில் தனியாருக்கும் அனுமதி தரப்பட்டது.
இதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இது பெரிய சர்ச்சையான நிலையில், புது மதுபான கொள்கையை வாபஸ் வாங்குவதாக டெல்லி அரசு அறிவித்து. இருப்பினும், இதில் ஊழல் நடந்தாக பாஜகவினர் புகார் அளித்தனர்.

சிறப்புக் கூட்டம்: இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அங்குத் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மீது ஊழல் புகார் வைக்கப்பட்டது. இதில் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அங்கே சிபிஐ அவரிடம் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது. இதையடுத்து அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார். இதில் சில உயர் மட்ட தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பாஜக குற்றம் சாட்டிய வந்தது.
இந்த சூழலில் இது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை ஞாயிறு காலை 11 விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து விவாதிக்க வரும் திங்கள்கிழமை டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் சாடல்: எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "இங்கே நிலைமை நன்றாக இல்லை. இது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும். உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்று டெல்லி தலைவர்கள் பேசுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே நீதிமன்றங்களில் பொய்யான பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்து பொய் சாட்சியம் அளித்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரு அமைப்புகளுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்போவதாக கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்தது குறித்து வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய அமைச்சர் கேள்வி: கெஜ்ரிவால் ட்வீட்டுக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நீங்கள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் நீதிமன்றம் மீதும் வழக்குத் தொடர்வீர்களா? சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும். நாம் சட்டத்தை நம்ப வேண்டும். அமலாக்கத் துறை, சிபிஐ எதிராக நீதிமன்றம் செல்வது போல உங்களைக் குற்றவாளி என அறிவித்தால் நீதிமன்றத்தை எதிர்த்தும் போவீர்களா?" என்று சாடியுள்ளார்.
சிசோடியா 14 போன்களை அளித்தாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இதை மறுக்கும் கெஜ்ரிவால், "இந்த 14 போன்களில், நான்கு அமலாக்கத் துறையிடமும், ஒன்று சிபிஐயிடமும் உள்ளன என்பதை மெமோ காட்டுகிறது. மற்ற போன்களில் பெரும்பாலானவை ஆம் ஆத்மி தொண்டர்களிடம் இருக்கிறது. இது குறித்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐக்கு தெரியும். பொய்யான பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சாடியுள்ளார்.
அரவிந்த் ஜெக்ரிவால் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக உள்ளார். அங்கே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் அங்கே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications