89 வயசான ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராகும்போது.. அத்வானியும் தேர்தலில் போட்டியிடலாமே.. சாமி பொளேர்!
டெல்லி: கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்ட ஸ்ரீதரனுக்கு வயது 89. ஆகவே அத்வானி, எம்.எம். ஜோஷி மற்றும் சாந்தா குமார் ஆகியோர் 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.
ஸ்ரீதரன் கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இதை மறுத்த மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சித் தலைமைதான் அறிவிக்கும் என்று கூறினார்.
கேரள மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் 88 வயதாகும் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது. கேரளா மாநில பா.ஜ.க முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான முரளிதரன் டுவிட்டர் பக்கத்தில் கேரள பா.ஜ.க, ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கும். நாம், சி.பி.எம்மையும், காங்கிரஸையும் தோற்கடிப்போம்' என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் என்று செய்திகள் வெளியானது.
இதனையடுத்து இதனை மறுத்துள்ள முரளிதரன், ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளர் என்று கட்சி எந்த அறிவிப்பையும் வெளியியிடவில்லை. ஊடகங்கள் வாயிலாக கட்சி ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். அதனையடுத்து, தற்போதைய தலைவர் சுரேந்திரனிடம் கேட்கும் போது கட்சி அப்படி ஏதும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்' என்று விளக்கம் அளித்தார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சித் தலைமைதான் அறிவிக்கும் என்று மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மெட்ரோ மேனை தொடர்புபடுத்தி டுவிட் ஒன்றை பதிவுட்டுள்ளார். அதில் கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்ட ஸ்ரீதரனுக்கு வயது 89. ஆகவே 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுழற்சி முறையில் பதவி கொடுக்கும் வகையில் அத்வானி, எம்.எம். ஜோஷி மற்றும் சாந்தா குமார் ஆகியோர் 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.