ராமர் பாலம்.. ராமர் கோயில்.. விடாது கருப்பாய் மோடிக்கு நெருக்கடி தரும் சு.சுவாமி!
டெல்லி: பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும் என்றும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் இரண்டு விஷயங்களுக்காக தங்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒன்று ராமர் சேது பாலம். 2002ம் ஆணடு ராமர் சேது பாலம் உள்ள பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கூட்டணியில் இருந்து திமுகவின் அழுத்தம் காரணமாகவே தேசிய ஜனநாயக கூட்டணி அப்போது ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2008ம் ஆணடு உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது கடுமையான வாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் சேது சமுத்திர திட்டத்தை(ராமேஸ்வரம் பகுதியில்) ரத்து செய்தது. மத்திய அரசும் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இந்நிலையில் ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். ஆனால் என்ன காரணத்துக்காக இதுவரை தங்களது அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெரியவில்லை. எனவே உடனடியாக ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்.
மற்றொரு விஷயம் அயோத்தியில் ராமர் கோயில் அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும். அயோத்தியில் அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும்" இவ்வாறு தனது கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.