தேர்தல் ஆணையத்தில் பனிப்போரா? தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பரபரப்பு அறிக்கை
டெல்லி: தேர்தல் ஆணையத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவசா, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதிய கடித விவகாரம் இன்று ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான புகார்களை விசாரிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டி வருகிறது என்பது, அசோக் லவசா அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று அந்த செய்திகள் மேலும் தெரிவித்தன.
தனது கருத்து ஆலோசனை கூட்டத்தில் மதிக்கப்படுவதில்லை என்றும், பெரும்பான்மை முடிவு என்ற பெயரில் ஆணையத்தின் மற்ற இருவரும் எடுக்கும் முடிவுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைப்பதாகவும், அசோக் லவசா தனது கடிதத்தில் அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தார்.
மோடி விஷயம் முக்கிய காரணம்.. தலைமை தேர்தல் ஆணையத்தில் வெடித்த பனிப்போர்.. தேர்தல் ஆணையர் போர்க்கொடி
இந்த நிலையில், சுனில் அரோரா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தேர்தல் ஆணையத்தின் 3 உறுப்பினர்களும், க்ளோன் செய்யப்பட்டதை போல ஒரே மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களிலும் பல முறை, கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அப்படித்தான் இருக்கும், இருக்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.