பதஞ்சலியை பதம் பார்த்த உச்சநீதிமன்றம்.. திரும்ப திரும்ப பண்ற நீ மொமண்ட்! நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
டெல்லி: அலோபதி மருத்துவத்திற்கு எதிரான விளம்பரங்களை வெளியிடுவதாக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. அதேபோல இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், “நீதிமன்ற உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது?” என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
பதஞ்சலி சார்பில் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களையும், டிஜிட்டல் தளத்தில் வெளியான விளம்பரங்களின் லிங்குகளையும் காட்டி, “நாங்கள் இன்று மிகக் கடுமையான உத்தரவை பிறப்பிக்க உள்ளோம். இந்த விளம்பரங்களை பாருங்கள். கடந்தமுறை வரும்போது எல்லாவற்றையும் சரி செய்வீர்கள் என்று சொன்னீர்களே? அந்த வாக்குறுதியை எதன் அடிப்படையில் கொடுத்தீர்கள்? அலோபதி மருந்துகளை விட உங்கள் தயாரிப்புகள் சிறந்ததா?” என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பதஞ்சலியின் பொருட்கள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் இப்பொருட்களின் தரம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதாவது, இப்பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை மூலப்பொருட்களை கொண்டே உற்பத்தி செய்யப்படுகிறது என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
எனவே பதஞ்சலி தயாரிப்பிலிருந்து 82 பொருட்களை எடுத்து ஹரித்வார் ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகம் ஆய்வு செய்தது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தன. இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதாக சொல்லப்பட்ட தயாரிப்புகளில் 31 சதவிகிதம் அந்நிய நாட்டின் மூலப்பொருட்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல 82 தயாரிப்புகளில் 40 சதவிகித பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் தரமற்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவை ராணுவ கேண்டீன்களில் விற்க தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications