இந்திய வரலாற்றிலேயே முதல் முறை! காஷ்மீர் தாக்குதலையடுத்து உச்சநீதிமன்றம் செய்த விஷயம் என்ன தெரியுமா?
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது. டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று சரியாக 2:00 மணிக்கு சைரன்கள் ஒலிக்க, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மவுனம் அனுசரித்தனர்.
இந்திய வரலாற்றில், ஒரு பயங்கரவாதச் செயலுக்கு இந்தியாவின் உயரிய நீதிமன்றம் கூட்டாக எதிர்வினையாற்றியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக, மகாத்மா காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30 அன்று காலை 11:00 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌனம் அனுசரிப்பது நீதிமன்றத்தின் மரபாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைத் தொடங்குவதற்கு மூத்த நீதிபதியும், அடுத்த தலைமை நீதிபதியாக வர வாய்ப்புள்ளவருமான நீதிபதி பூஷண் ஆர். கவாய் முன்முயற்சி எடுத்ததாக மூத்த நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் நீதிபதி சூர்ய காந்துடன் ஆலோசனை நடத்தினார். தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று நாட்டில் இல்லை. பஹல்காம் சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் காட்சிகளைப் பார்த்த பிறகு, மூத்த நீதிபதிகள் மதிய உணவு இடைவேளையின் போது அவசர ஆலோசனை நடத்தினர். பிற்பகல் 1:45 மணியளவில், உச்ச நீதிமன்றத்தில் இருந்த அனைத்து நீதிபதிகளும் கூடி, ஒரு தீர்மானத்தை உருவாக்கி ஏற்றுக்கொண்டனர். சரியாக 2:00 மணிக்கு, நடைமுறைகளைப் பின்பற்றி, சைரன்கள் ஒலிக்கப்பட்டு மௌனம் அனுசரிக்கப்பட்டது.
"இந்தியாவின் கிரீடமாகத் திகழும் காஷ்மீரின் இயற்கை அழகை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மனிதநேய விழுமியங்கள் மற்றும் வாழ்வின் புனிதத்திற்கு எதிரான ஒரு தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை. இதை இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று உச்ச நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "உலகிலேயே அதன் அதிகார வரம்பின் அடிப்படையில் மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றமான நாட்டின் உயரிய அரசியலமைப்பு நீதிமன்றம் இந்திய உச்சநீதிமன்றம்தான். அந்த நீதிமன்றம், துக்கத்தில் உள்ள மற்றும் காயமடைந்த தேசத்துடன் நிற்கிறது.
இது உலகிற்கும், பயங்கரவாதத்தைப் பரப்புபவர்களுக்கும், எல்லைக்கு அப்பால் இருந்து அவர்களைக் கண்காணிப்பவர்களுக்கும் இதுவரை இல்லாத ஒரு வலுவான செய்தியாகும். பஹல்காமில் கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் காயமடைந்து வேதனையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவின் நீதித்துறையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியது. டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர்-லடாக் உயர் நீதிமன்றங்களும் இதேபோன்ற கண்டனங்களைத் தெரிவித்து, ஒற்றுமையின் அடையாளமாக ஒரு நிமிடம் மௌனம் அனுசரித்தன. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நீதிமன்றத்தின் மத்திய புல்வெளியில் கூடி பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications