ஈஷா யோகா மையத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
டெல்லி: கோவை ஈஷா மையத்தில் இருக்கும் தனது மகள்களை மீட்டுத் தருமாறு அவர்களது தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா மையத்தில் உள்ள தனது இரு மகள்கள் கீதா (42), லதா (39) ஆகியோரை மீட்டுத் தருமாறு கோவை வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ்.காமராஜ் என்பவர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது பதிலளித்த ஈஷா மையம், அந்த இரு பெண்களும் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் இங்கு தங்கியுள்ளார்கள். அவர்களின் தந்தை மீதுதான் அவர்களுக்கு அதிருப்தி என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில் இரு பெண்களும் 18 வயதை கடந்தவர்கள். அவர்கள் ஆசிரமத்திற்கு வந்த போதும் அவர்கள் மேஜர்தான் (27, 24 வயது).
அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவருமே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அது போல் அந்த இருவரில் ஒரு பெண் உச்சநீதிமன்றத்திலும் வீடியோ கால் மூலம் ஆஜராகினார்.
அப்போது அவர் கூறுகையில், நானும் என்னுடைய சகோதரியும் விருப்பத்தின் பேரில்தான் ஈஷாவில் வசித்து வருகிறோம். எனது தந்தைதான் எங்களை 8 ஆண்டுகளாக துன்புறுத்தினார். என் தாயும், என் தந்தைக்கு சளைத்தவர் அல்ல, அவரும் எங்களை கொடுமைப்படுத்தினார் என தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அவர்களுடைய மனு மீது தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications