தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்!
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மீது பாலியல் புகார் அளித்த பெண், மூன்று நீதிபதிகள் விசாரணை குழு முன்பாக இன்று ஆஜராகினார்.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மீது பாலியல் சீண்டல் புகார் தெரிவித்து, 22 நீதிபதிகளுக்கு பிரமாணப் பத்திரம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து விசாரிக்க, மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில், இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு முன்னிலையில், புகார் கூறிய பெண் இன்று ஆஜரானார். அப்போது, உடன் வந்த நீதிமன்ற செயலாளர், அப்பெண் கொடுத்த பிரமாணப் பத்திரங்கள், ஆவணங்களை, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகிய இரு பெண் நீதிபதிகளிடம் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
விசாரணையின்போது, நீதிமன்ற ஹாலுக்குள், புகார் அளித்த பெண்ணை தவிர வேறு யாரும் இருக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரின் பின்னணியில் பெரும் சதி உள்ளதாக வழக்கறிஞர், உற்சவ் பயின்ஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த, அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளது. அந்த குழு, பின்னணியில் உள்ள சதி குற்றச்சாட்டு பற்றி விசாரிக்கிறது.