Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்பு வழக்கு: வக்பு சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை? உச்சநீதிமன்றத்தில் இரு தரப்பும் காரசார வாதம், என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வக்ப் (திருத்த) சட்டம், 2025-ன் அரசியலமைப்பு அங்கீகாரத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டம் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தை பறிப்பதாகவும், வக்ப் சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சி என்றும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், வக்ப் சொத்துக்களின் முறைகேடான நிர்வாகத்தைச் சரிசெய்யவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவுமே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு வாதிடுகிறது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்த விசாரணை மே 20 அன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

Waqf supreme court

வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதிலும், மேலாண்மை செய்வதிலும் உள்ள சிக்கல்களைக் களைவதற்காக வக்ஃப் திருத்த மசோதா - 2025 அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விதிகளைத் தெளிவுபடுத்துதல், முடிவெடுக்கும் அமைப்புகளில் அதிகமானோரைச் சேர்ப்பது, வக்ஃப் சொத்துக்களின் பயன்பாட்டை மேம்படுத்துவது, பதிவு செயல்முறையை நவீனப்படுத்துவது மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஏப்ரல் 5 அன்று பெற்றது. இந்த மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டிருந்தது.

யார் எதிர்க்கிறார்கள்? ஏன்?

இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் உவைசி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB), ஜாமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தச் சட்டம் அரசியலமைப்பின் 25 மற்றும் 26வது பிரிவுகள் வழங்கும் மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும், வக்ப் வாரியங்களின் தன்னாட்சி தன்மையைப் பாதிப்பதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மனுதாரர்கள் தரப்பு வாதங்கள்

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி முன்வைத்த முக்கிய வாதங்கள்: இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது. இது வக்ப் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை அபகரிக்கும் ஒரு முயற்சி. இது அரசியலமைப்பின் 25வது பிரிவை (மதத்தைப் பின்பற்றுவதற்கும், பரப்புவதற்குமான உரிமை) மீறுகிறது.

சொத்துக்களை வக்ப் தன்மையிலிருந்து நீக்குதல் (De-notification):

பயன்பாடு (user) அல்லது பத்திரம் (deed) மூலம் வக்ப் என அறிவிக்கப்பட்ட சொத்துக்களை வாரியங்கள் வக்ப் தன்மையிலிருந்து நீக்கும் அதிகாரம் கவலை அளிக்கிறது. ஒரு நிலம் அரசுக்குச் சொந்தமானதா அல்லது வக்ப் சொத்தா என்பதை மாவட்ட ஆட்சியர் விசாரிக்கும்போது, அந்த விசாரணை அறிக்கை வரும் வரை அந்தச் சொத்து வக்ப் ஆக கருதப்படாது என்ற விதிமுறை ஏற்கத்தக்கதல்ல.

மாநில வக்ப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ப் கவுன்சிலில் அலுவல் வழி உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவரும் முஸ்லிம்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற பாரம்பரிய நடைமுறை மாற்றப்படுவது கவலையளிக்கிறது. பயன்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட வக்ப் (Waqf by user) என்பதற்கு பாபர் மசூதி ஒரு உதாரணம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி உருவாக்கப்பட்ட வக்ப் சொத்துக்களின் நிலை என்னவாகும்?

வக்ப் சொத்துக்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற திருத்தம், நிர்வாக நடைமுறைகள் மூலம் வக்ப் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி. சொத்துரிமை குறித்த சிறிய சர்ச்சை ஏற்பட்டால்கூட, அந்த சொத்துக்களை அரசு அபகரிக்க இந்த சட்டம் வழிவகுக்கும்

மசூதிகளுக்கு நிதி

மசூதிகளில் கோயில்களைப் போல உண்டியல் வருமானம் கிடையாது. அவை பெரும்பாலும் நன்கொடைகளில்தான் இயங்குகின்றன. அரசு மத அமைப்புகளுக்கு நேரடியாக நிதியுதவி செய்ய முடியாது. ஒருவர் தனது சொத்தை வக்ப் செய்ய வேண்டுமானால், அவர் குறைந்தது 5 ஆண்டுகளாக இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை, அரசியலமைப்பின் 14, 25, மற்றும் 26வது பிரிவுகளை மீறுவதாகும். ஒருவர் ஏன் தான் இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

புதிய சட்டத்தின்படி, ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது தனி நபரோ புகார் அளித்தால் கூட, ஒரு சொத்து வக்ப் இல்லை என்றாகிவிடும். அரசு அதிகாரியே குற்றச்சாட்டுகளை விசாரித்து முடிவெடுப்பார். இது அவரை வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் ஆக்குகிறது. இது குடிமக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் மற்றும் நியாயமற்றது.


மத்திய அரசின் பதில் வாதங்கள்

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த முக்கிய வாதங்கள்: இந்தச் சட்டம் மதச்சார்பற்றது மற்றும் நாடாளுமன்றத்தில் உரிய விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டது. மனுதாரர்கள், இந்தச் சட்டம் மத விவகாரங்களில் தலையிடுவதாக ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்குகின்றனர். வக்ப் சொத்துக்களை கட்டாயம் பதிவு செய்வது என்பது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நடைமுறை.

2013ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தால் அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அந்த முறைகேடுகளைத் தடுப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம். 2013 வரை 18.3 லட்சம் ஏக்கராக இருந்த வக்ப் நிலங்கள், அதன் பிறகு 39.2 லட்சம் ஏக்கராக அதிகரித்தது அதிர்ச்சியளிக்கிறது.

நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு இயல்பாகவே செல்லுபடியாகும் தன்மை உண்டு. முழுமையான விசாரணைக்கு முன்பாக அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக்கூடாது. நீதிமன்றம் மூன்று முக்கிய பிரச்சினைகளை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்: நீதிமன்றம், பயன்பாடு அல்லது பத்திரம் மூலம் வக்ப் என அறிவிக்கப்பட்ட சொத்துக்களை வக்ப் தன்மையிலிருந்து நீக்கும் வாரியங்களின் அதிகாரம், மத்திய வக்ப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பது; மற்றும் அரசு நிலத்தை வக்ப் என தீர்மானிக்கும் செயல்முறை ஆகியவற்றை மட்டும் விசாரிக்க கேட்டுக்கொள்கிறோம்.

கபில் சிபலிடம் கேள்விகள்

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபடும் உரிமை பறிபோகுமா என்றும், பழைய சட்டங்களில் வக்ப் சொத்துக்களை பதிவு செய்வது கட்டாயமா என்பது குறித்தும் தலைமை நீதிபதி கவாய், மனுதாரர்கள் தரப்பு வக்கீலான கபில் சிபலிடம் கேள்விகளை எழுப்பினார். (பழைய சட்டங்களில் பதிவு செய்ய வேண்டும் (shall be registered) என்று கூறப்பட்டிருந்தாலும், அவ்வாறு செய்யாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தெளிவான விதிகள் இல்லை என்று சிபல் பதிலளித்தார்).

அவுரங்காபாத் உதாரணம்

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் வக்ப் சொத்துக்கள் தொடர்பாக பல சர்ச்சைகள் நிலவுவதையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதன்மை மனுக்களை மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் முன்னரே தெரிவித்திருந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின் முக்கிய நோக்கம், இந்தச் சட்டத்தின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும், அவ்வாறு உத்தரவு பிறப்பித்தால் அதன் வரையறைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்வதாகும்.

மத்திய அரசு, வக்ப் சொத்துக்களை வக்ப் தன்மையிலிருந்து நீக்கவோ அல்லது மத்திய வக்ப் கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு புதிய நியமனங்கள் செய்யவோ மாட்டோம் என மே 20 வரை உறுதியளித்திருந்தது.. மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம், இடைக்கால உத்தரவு குறித்த தனது முடிவை பின்னர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+