பட்டாசு விற்பனைக்கு முழு தடை கிடையாது.. ஆனால் இந்த நிபந்தனைகள் அவசியம்.. உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: நாடு முழுக்க பட்டாசு விற்பனைக்கு தடை கோரும் மனுக்கள் மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. இதன்படி, பட்டாசு விற்பனைக்கு முழு தடை விதிக்கவில்லை என்றபோதிலும், சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
நாடு முழுக்க புகை காரணமாக மாசு அதிகரித்துள்ளதாகவும், எனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில்தான் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
இருவேறு கருத்துக்கள்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பட்டாசு விற்பனைக்கு நாடு முழுக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டிருப்பது காரணமாக, பட்டாசு விற்பனைக்கு மொத்தமாக தடை விதிக்க கூடாது என்று மற்றொரு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் கட்டுப்பாடு
கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின்போது டெல்லியின் என்.சி.ஆர் மண்டலத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தேசிய அளவில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இப்படியாக இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ள நிலையில், தேசிய அளவில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஆன்லைனில் பட்டாசு விற்பனை
எதிர்பார்ப்புக்கு நடுவே, மனுக்கள் மீதான உத்தரவை இன்று பிறப்பித்ததாக உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சிவகாசியில் பரபரப்பு
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனை தொடர்பாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக சிவகாசி உள்ளிட்ட பட்டாசு உற்பத்தி மையங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஆனால் தீர்ப்பையடுத்து பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நிபந்தனைகள்
பட்டாசு விற்பனைக்கு முழு தடை விதிக்காவிட்டாலும், இந்த நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
- குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்
- லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டும்
- ஆன்லைனில் பட்டாசு விற்பனை கூடாது
- விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்
- இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க வேண்டும்.