சட்டசபையில் அமளி.. மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்களின் ஒரு வருடகால சஸ்பெண்ட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ-க்கள் 12 போ் ஓராண்டு காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, அப்போதைய தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்று பாஜகவின் 12 எம்.எல்.ஏ.க்கள் பிரச்னையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா
மாநில மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மராத்தா பிரிவினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என கோரி மராத்தா பிரிவினர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, மகாராஷ்டிரா அரசு அவர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மத்திய அரசு இடஒதுக்கீட்டுக்கு முடிவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த சீராய்வு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், மராத்தா இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து ஆளும்கட்சியும் பாஜகவும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவின் அலுவலகத்துக்கு சென்றனர்.

சபாநாயகர்
சபாநாயகர் அறையில் பாஜக உறுப்பினர்கள் முறைகேடாக நடந்து கொண்டதாகவும், பாஸ்கர் ஜாதவை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தாக்கியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அப்போதைய இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ், 12 பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முறைகேடாக பேசியதாகவும், அமளியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி ஒரு வருடத்துக்கு அவர்களை இடைநீக்கம் செய்தார்.

நீக்கம்
இதைதொடர்ந்து, பிரச்னையில் ஈடுபட்ட ஆஷிஷ் ஷெலார், பராக் அல்வானி, அதுல் பட்கல்கர், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, ஹரிஷ் பிம்பலே, அபிமன்யு பவார், ஜெய்குமார் ராவல், கீர்த்திகுமார் பாங்டியா, கிரிஷ் மகாஜன், ராம் சத்புட் மற்றும் சஞ்சய் குட் ஆகிய 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். மகாராஷ்டிர பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து பாஜகவின் 12 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது நீதிபதி 'எம்.எல்.ஏ.க்களை ஓராண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்து அரசியலமைப்பிற்கு எதிரானது. பிரச்னையில் ஈடுபடுபவர்களை ஒரு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யலாமே தவிர, நீண்ட காலம் இடைநீக்கம் செய்ய முடியாது' என கூறி இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications