செந்தில் பாலாஜி ஜாமீன் மனு- உச்சநீதிமன்றத்தில் இன்றும் வாங்கி கட்டப் போகிறதா அமலாக்கத்துறை?
டெல்லி: தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் பென் டிரைவ் தொடர்பாக கேள்விக்கு பதில் தர ஏற்கனவே 8 முறை வாய்தா கேட்டது அமலாக்கத்துறை. அத்துடன் அமலாக்கத்துறை தரப்புதான் நேற்றும் விசாரணையை ஒத்திவைக்க கோரியது. இதனால் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதங்களை முன்வைக்குமா? அல்லது வழக்கம் போல டோஸ் வாங்குமா? என்பது எதிர்பார்ப்பு.
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் ஜோசப் ஹுசைன், 3-வது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் ஆஜராக வேண்டும். அதனால் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒருநாள் ஒத்தி வைக்க வேண்டும் என்றார். இதில் கடுப்பாகிப் போன நீதிபதி ஓகா, இன்னொரு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்காக இந்த நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைப்பதா? இது சரியான கருத்து அல்ல என கடிந்து கொண்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி குறுக்கிட்டு, ஏற்கனவே இதே அமலாக்கத்துறை தரப்புதான் பென் டிரைவ் ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கே 8 முறை வாய்தா வாங்கியது என சுட்டிக்காட்டினார். அமலாக்கத்துறை வழக்கறிஞரை மீண்டும் மீண்டும் சாடினார் நீதிபதி. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எழுந்து, வழக்கை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என்றார். மேலும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் முன்வைத்த கருத்து தவறுதான் என்றார். அமலாக்கத்துறை வழக்கறிஞரும் தாம் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டார்.
இதன் பின்னர் அமலாக்கத்துறை தரப்பில் பென் டிரைவ் ஆவணங்கள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்ப, பான் கார்டு இல்லாமல் பல லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது; வருமானம் குறித்த செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் முரண்பாடாக உள்ளது என பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications