இடஒதுக்கீடு முறையையே ரத்து செய்க- வழக்கு போட்ட இமாச்சல் சட்ட மாணவிக்கு டோஸ் விட்ட சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்பற்றப்படுகிற இடஒதுக்கீடு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த இமாச்சல பிரதேசத்தின் சட்டக் கல்லூரி மாணவிக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது.
நாடு விடுதலைக்கு முன்னர் இந்தியா பல்வேறு தேசங்களாக, சுயாட்சிப் பிரதேசங்களாக இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா என ஒருநாடாக ஒருங்கிணைக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் தொடக்க காலங்களில் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சமூகத்தினரே கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பெரும்பான்மையினராக இருந்தனர். இந்த சமூக அநீதிக்கு எதிராகவே தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் உருவானது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சி தொடங்கி இன்று திமுகவரை கல்வி, வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது.

நாடு விடுதலை அடைந்த பின்னர் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. அந்த அரசியல் சாசனத்தின் முதலாவது திருத்தமே ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கானது. அந்தத் திருத்தம் கொண்டுவரப் போராடியது தமிழ்நாடு. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தந்தை பெரியார்.
1980களின் இறுதிவரையில் மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை; ஓபிசியினருக்கான கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியவர் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அவருக்கு உறுதுணையாக இருந்தது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. திமுகவின் ஆதரவுடன் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக வட இந்தியாவில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிளர்ச்சி செய்தனர். ஆனால் தென்னகம் அமைதி காத்தது. தமிழகமோ முழுவதுமாக விபிசிங்கை ஆதரித்தது. பின்னர் இடஒதுக்கீடு அளவு 50%-க்கும் மேல் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகமோ 69% இடஒதுக்கீட்டை கொண்டு வந்து அதற்கு அரசியல் சாசனப் பாதுகாப்பையும் பெற்றது. இதனாலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சமூக நீதி காத்த வீராங்கனை எனப் போற்றப்பட்டார்.
தற்போதைய மத்திய பாஜக அரசில், முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதி ஏழைகள் என்ற பிரிவை உருவாக்கி 10% இடதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு எதிராக சட்டப் போராட்டங்களை தமிழகத்தில் ஆளும் திமுக அரசும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழகம் கடந்த 100 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைட் தகர்க்கப் போராடு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இமாச்சல பிரதேசத்தைச் சட்டக் கல்லூரி மாணி ஷிவாணி என்பவர் ஒட்டுமொத்தமான இடஒதுக்கீடு முறையையே ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இடஒதுக்கீட்டு முறையால் நாடு பின் தங்கிப் போவதாகவும் ஷிவாணியின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஷிவாணியின் பொதுநலன் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது, எப்படி இது போன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன? இப்படியான வழக்குகள் தொடரப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை திரும்பப் பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கடுமையாக எச்சரித்தனர் நீதிபதிகள். இதனையடுத்து சட்டக் கல்லூரி மாணவி ஷிவானியின் வழக்கறிஞர், இந்த மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதற்கு நீதிபதிகள் அனுமதித்தனர். பின்னர் ஷிவாணி தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications