நாடாளுமன்ற தாக்குதல் 2023: கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்- முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தர கோரியதால் லோக்சபாவில் திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பிக்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தின் மீது 2001-ம் ஆண்டு பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு நேற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதே நாளில் நேற்றும் நாடாளுமன்றத்துக்குள் 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்து லோக்சபாவுக்குள்ளும் நாடாளுமன்ற வளாகத்திலும் புகை பொருட்களை வீசி முழக்கங்களை எழுப்பியது. இது நாட்டையே கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இன்று லோக்சபா, ராஜ்யசபாவில் சரமாரியாக கேள்வி எழுப்பின. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதனையடுத்து லோக்சபாவில் திமுகவின் கனிமொழி எம்பி உட்பட 15 பேர் ஒரே நாளில் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தங்களது இடைநீக்கத்தைக் கண்டித்து 15 எம்பிக்களும் நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் போராட்டம் நடத்தினர்.
Suspension of 15 Opposition MPs, including DMK MP @KanimozhiDMK is undemocratic and undermines the spirit of Parliamentary democracy.
— M.K.Stalin (@mkstalin) December 14, 2023
The intolerant attitude of the BJP-led Union Govt is condemnable.
Is crushing MPs' freedom of expression the new norm in our Parliament? Why… pic.twitter.com/8XTA0xnZzX
திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற ஜனநாயக உணர்வை குழிதோண்டிப் புதைத்துள்ளனர். மத்திய அரசின் இத்தகைய சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவது என்ன புதிய விதிமுறையாகிவிட்டதா நாடாளுமன்றத்தில்?
ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்துதானே மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்காக மக்கள் பிரதிநிதிகளை ஏன் தண்டிக்க வேண்டும்? 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தை விவாத மேடையாக கருத வேண்டும்; நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் வாயடைக்க வைக்கும் இடமாக மாற்றக் கூடாது என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications