பிரதமர் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின்.. மோடியுடன் சந்திப்பு.. துரைமுருகன், டி.ஆர்.பாலு உடனுள்ளனர்
டெல்லி: டெல்லி வந்து சேர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரின் இல்லத்தில் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு இதுவாகும். தமிழகத்திற்குக் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்.
Recommended Video
மேலும், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல் பட்டியலுடன் அவர் மோடியைச் சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதல்வராக மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வந்தார்.
"அச்சாரம்".. தேசிய அரங்கிற்கு உயரும் ஸ்டாலின்.. மோடியுடன் என்ன பேச போகிறார்?.. நினைத்தது நடக்குமா?
முதல் சந்திப்பு
கடிதங்கள் மூலமே இருவரும் தொடர்பு கொண்ட நிலையில், முதல்வரான பிறகு முதல் முறையாகப் பிரதமரை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை முக்கிய விஷயங்களாக உள்ளன. கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இருக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
கோரிக்கை மனு
இந்த நிலையில் முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று ஜூன் 17ம் தேதி டெல்லி செல்கிறார்.
அங்குப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.
விமானத்தில் கிளம்பினார்
டெல்லி பயணத்திற்காக இன்று காலை 7 மணிக்குச் சென்னையில் உள்ள வீட்டிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு, காலை 7.20 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். 7.30 மணிக்குச் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். அவருடன், ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் டெல்லி புறப்பட்டார்.
சிறப்பான வரவேற்பு
காலை 10 மணிக்கு அவர் டெல்லி விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு திமுக எம்.பி.க்கள் ஸ்டாலினுக்கு வரவேற்பு வழங்கினார்கள். கனிமொழி, டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். டெல்லி சிறப்புப் பிரதிநிதி விஜயனும் வந்து வரவேற்பு வழங்கினார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்றனர். பின்னர் டெல்லியில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்குச் சென்று பார்வையிட்டார். இதன்பிறகு இன்று மாலை 5 மணிக்கு டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்திற்குச் சென்றார் ஸ்டாலின். அவரோடு தமிழக சீனியர் அமைச்சர் துரைமுருகன், லோக்சபா திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மோடியுடனான சந்திப்பின்போது உடனுள்ளனர்
மாலை சந்திப்பு
மாலை 5 மணிக்கு, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்குப் பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்குக் கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்துவார்.
ஊழல் புகார்
திமுக தேர்தல் அறிக்கையில், அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே மோடியைச் சந்திக்கச் செல்லும்போது முன்னாள் அமைச்சர்கள் சிலரின் ஊழல்கள் அடங்கிய பட்டியலை ஸ்டாலின் கொண்டு சென்று வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர்கள்
நாளை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உள்ளிட்ட சில அதிகாரிகள் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர். தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.