"என்ன என்ன முழக்கங்கள் வருமோ"? லோக்சபாவில் நாளை "சம்பவம்" செய்ய போகிறார்களா 39 தமிழக எம்பிக்கள்?
டெல்லி: 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் நாளை பதவியேற்க உள்ளனர். லோக்சபாவில் நாளை பகல் 1 மணி முதல் 3 மணி வரை தமிழ்நாட்டு எம்பிக்கள் 39 பேரும் அகர வரிசைப்படி பதவியேற்க உள்ளனர். தமிழக எம்பிக்கள் பதவி ஏற்பின் போது எத்தகைய முழக்கங்களை எழுப்புவார்கள் என்பது எதிர்பார்ப்பு.
18-வது லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று தொடக்கம்: 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் முதல் 2 நாட்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்பர். தற்காலிக சபாநாயகர் பாஜகவின் பர்த்ருஹரி மகதாப் புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தற்காலிக துணை சபாநாயகர்: புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு தற்காலிக சபாநாயகருக்கு உதவ கொடிக்குன்னில் சுரேஷ்(காங்கிரஸ்), டிஆர். பாலு(திமுக), ராதா மோகன் சிங்(பாஜக),பகன்சிங் குலஸ்தே(பாஜக) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இடம் பெறாமல் புறக்கணிக்க உள்ளனர்.
நாளை பதவியேற்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்களும் நாளை பதவியேற்க உள்ளனர். தமிழ்நாட்டு எம்பிக்களுக்கு பிற்பகல் 1 முதல் 3 மணி வரை பதவியேற்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019-ல் என்ன நடந்தது?: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது; 1 இடத்தில் அதிமுக வென்றது. லோக்சபாவில் தமிழ்நாட்டின் திமுக, அதிமுக எம்பிக்களும் அப்போது தமிழிலேயே பதவியேற்றனர். 2019-ல் திமுக கூட்டணி எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்ற போது பெரியார் வாழ்க என முழக்கமிட்டனர். சில எம்பிக்கள் தமிழ் வாழ்க எனவும் முழக்கமிட்டனர். தந்தை பெரியார் வாழ்க என திமுக கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்ட போது ஜெய் ஶ்ரீராம் என பாஜக கூட்டணி எம்பிக்கள் பதில் முழக்கமிட்டனர். அதேபோல தமிழ் வாழ்க என முழக்கமிட்டால் உடனே பாரத் மாதா கீ ஜே என கோரஸாக பாஜக கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட சபை நடவடிக்கைகள் பரபரப்பாகின.
நாளை சம்பவம் இருக்கு? : தற்போது தமிழ்நாட்டில் 39 இடங்களையும் திமுக கூட்டணி எம்பிக்களே கைப்பற்றி உள்ளனர். 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத்திலேயே தமிழக எம்பிக்கள் நாளை பதவியேற்கும் போது என்ன முழக்கங்களை எழுப்புவார்கள்; இதற்கு பாஜக கூட்டணி எம்பிக்கள் என்ன பதில் முழக்கங்களை எழுப்புவர் என்பது பெரும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications