மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. மரபுப்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தி கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார்.
அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசு கொடுத்த உரையில் சில பத்திகளை வாசிக்காமல் தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள்
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் படி ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இடம்பெற செய்யவில்லை. மாறாக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. தமிழக சட்ட சபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் சந்தித்தனர்.

திருப்பி அனுப்பினார்
இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று டெல்லி சென்று திரும்பினார். இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்காமல் வைத்து இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

மீண்டும் நிறைவேறிய மசோதா
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் ஏக மனதாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை விரைவில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அமித்ஷாவுடன் சந்திப்பு
இத்தகைய பரபரப்பான சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றுப்பட்டுள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications