PM SRI பள்ளிக்கு ஒப்புதல்.. இந்தாங்க உங்க லெட்டர்! தர்மேந்திர பிரதான் பதிவு.. அன்பில் மகேஷ் பதிலடி
டெல்லி: மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிப்பதாக அனுப்பிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் உண்மையை மறைக்க முடியாது என அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காசி தமிழ் சங்கமத்தில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி தர முடியும் என பேசி இருந்தார்.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் அப்போது பேசிய அவர் நாகரீகமற்றவர்கள் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
இதனால் தமிழ்நாடு கொந்தளித்த நிலையில் தான் பல்வேறு பகுதிகளிலும் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பேச்சை திரும்ப பெறுவதாக கூறியிருந்தார். தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர் தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் 100 முறை கூட மன்னிப்பு கேட்டுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில்,"நேற்று, திமுக எம்.பி.க்களும், முதல்வர் ஸ்டாலினும், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அமைப்பதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டினர்.
நாடாளுமன்றத்தில் நான் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன். இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் 15 மார்ச் 2024 தேதியிட்ட ஒப்புதல் கடிதத்தைப் பகிர்ந்துள்ளேன். திமுக எம்.பி.க்களும் மாண்புமிகு முதலமைச்சரும் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி விடலாம், ஆனால் அதனை உடைக்க உண்மை அஞ்சாது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழக மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டும். மொழிப் பிரச்சினையை திசை திருப்பும் உத்தியாகக் கருதுவதும், அவர்களின் வசதிக்கேற்ப உண்மைகளை மறுப்பதும் அவர்களின் ஆட்சியை பாதுகாக்காது. தேசிய கல்விக் கொள்கையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று முதல்வரை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டின் குழந்தைகளின் ஆர்வத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்." என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் உண்மைகளை மாற்றமுடியாது. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி எழுதிய கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கூறவில்லை. குழு அமைக்கப்படும், அதன் பரிந்துரைப்படி திட்டத்தில் சேருவது பற்றி முடிவு என்றே கூறினோம். தமிழ்நாட்டின் கல்வி முன்மாதிரியானது. தவறான தகவலை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டின் கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications