நிதி மழையில் பீகார், ஆந்திரா! தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் எங்கே? தமிழ்நாடு எம்பிக்கள் கடும் அமளி
டெல்லி: சிக்கிம், அஸ்ஸாம், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கெல்லாம் வெள்ள பாதிப்புக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாததை கண்டித்து தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வென்ற பாஜக, கூட்டணியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

லோக்சபா தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெறாத நிலையில் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தேர்வான எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இவர்கள் வாபஸ் பெற்றுவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்கள் நிதி மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன. அமிருதசரஸ்- கொல்கத்தா தொழில் வழித்தடத்தில் பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறை அனுமதியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படும், சாலை இணைப்புத் திட்டங்களான பாட்னா- பூர்னியா விரைவுச் சாலை, பக்சர்- பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா- ராஜ்கிர்- வைசாலி- தர்பங்கா மற்றும் பக்சரில் கங்கை ஆற்றின் மீது கூடுதல் இருவழி பாலம் ஆகியவற்றை ரூ 26 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும்.
அது போல் ஆந்திரா மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து பலதரப்பு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவி எளிதாக்கப்படும். நடப்பு நிதியாண்டில் ரூ 15 ஆயிரம் கோடி கூடுதல் தொகைகளுடன் வரும் ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்படும்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் முடிக்கவும், நிதியுதவி செய்யவும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
சிக்கிம், அஸ்ஸாம், உத்தரகாண்ட், இமாச்சல், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் வெள்ளப் பாதிப்புக்கான சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்தார். ஆனால் தமிழகத்திற்கு எந்த சிறப்பு நிதியும் வெள்ள பாதிப்பிற்கென ஒதுக்கவில்லை. இதனால் தமிழக எம்பிக்கள் 39 பேரும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் அது போல் சில வாரங்கள் கழித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்து சேதாரம் ஏற்பட்டது. மக்களின் பொருட்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் மாநில அரசு பலமுறை கேட்டும் தரவில்லை என ஆளும் கட்சி குற்றம்சாட்டியது. இந்த நிலையில் தமிழகத்திற்கு மழை நிவாரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 276 கோடி ரூபாய் அளித்தது. அது போல் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்கு ரூ 115 கோடியும் டிசம்பர் மழை வெள்ள பாதிப்புக்காக ரூ 160 கோடியும் என மொத்தம் தமிழகத்திற்கு ரூ 276 கோடி நிவாரணமாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் தோராயமாக ரூ 5060 கோடியும் அதற்கு இடைக்கால நிவாரணமாக ரூ 2000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரியிருந்த நிலையில் மத்திய அரசோ வெறும் ரூ 276 கோடியை மட்டுமே ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications