அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு.. சிஏஏ போராட்டம் பற்றி ஆலோசனை.. அடுத்து அதிரடியா?
டெல்லி: டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள், தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றுக்கு எதிராக இஸ்லாமிய மக்கள் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களின் முக்கியமான கோரிக்கை ஒன்றுதான். குடியுரிமை சட்டத் திருத்தம் தமிழகத்தில் அமல்படுத்த படாது என்று கூறி ஒரு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அது.

எடப்பாடி பழனிச்சாமி
இதுவரை அதிமுக அரசு அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை. தமிழகத்தில் இந்த சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதை எனக்குக் காட்டுங்கள் என்று, திமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையிலேயே சவால் விடுத்தார். சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மட்டும் சொல்லவில்லை.

எடப்பாடி யோசனை
எனவே, இஸ்லாமியர்கள் போராட்டம் என்பது தொடர்ந்து பல்வேறு வகைகளில் நடந்தபடி இருக்கிறது. இதனால் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரலாமா என்ற யோசனையில் எடப்பாடிபழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

தீர்மானம்
அப்போது அவரிடம், தமிழக சட்டசபையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு இது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அவர் பதிலளித்தார். இது ஒரு பாசிட்டிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் திடீர் பயணமாக தமிழக சீனியர் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

பிற மாநிலங்கள்
பாஜக கூட்டணி அரசாங்கம் ஆளக்கூடிய பீகார் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் நிறைவேற்றினால் என்ன தவறு என்ற கேள்விகள் அதிமுக சீனியர்களிடம் எழுந்துள்ளன. எனவே விரைவிலேயே சட்டசபையில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இது தொடர்பாக இன்று அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கக்கூடும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications