2 மாதத்தில் ரூ.4 லட்சம் போச்சு.. Blinkit தளத்தில் இஷ்டத்திற்கு ஆர்டர் போட்ட இளைஞர்! கடைசியில் பாவம்!
டெல்லி: இப்போது இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளில் மளிகைப் பொருட்கள் மட்டுமல்ல பல ஆயிரம் மதிப்பிலான பிரிட்ஜ், டிவி போன்ற பொருட்களும் கூட கிடைக்கிறது. இதனால் ஒரு ஆர்வத்தில் எதாவது பொருட்களை ஆர்டர் செய்து பொதுமக்கள் பலரும் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்படித் தான் இங்கு இளைஞர் ஒருவர் இரண்டே மாதத்தில் ரூ.4 லட்சத்தை இன்ஸ்டன்ட் டெலிவரியில் செலவிட்டிருக்கிறார்.
கடந்த 5.6 ஆண்டுகளாகவே இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் படுவேகமாக வளர்ந்து வந்தது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அதில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இப்போது கடந்த சில ஆண்டுகளாக அது அடுத்த லெவலுக்கே போய்விட்டது. instant delivery செயலிகளின் ஆதிக்கம் கடந்த சில காலமாகப் படுவேகமாக அதிகரித்து வருகிறது.

இன்ஸ்டன்ட் டெலிவரி
அதாவது ஆன்லைன் டெலிவரி சர்வீஸில் நாம் ஒரு பொருளை ஆர்டர் போட்டால் அவை கைக்கு வந்து சேரவே சில நாட்களாவது ஆகும். ஆனால், இந்த இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளில் அப்படி இல்லை.. நாம் ஒரு விஷயத்தை ஆர்டர் போட்டால் அது சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்துவிடும். இந்த இன்ஸ்டன்ட் டெலிவரி பிரிவில் இந்தியா தான் உலகிற்கே முன்னோடியாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட இதைப் பார்த்து வியந்து போகிறார்கள்.
கடைசி நிமிடத்தில் எதாவது பொருட்கள் தேவைப்பட்டால் அதைப் பூர்த்தி செய்வதில் இந்த இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் கிங்காக இருக்கிறது. அதேநேரம் வீட்டில் இருந்தபடியே இரு கிளிக் செய்வதன் மூலமாகவே எல்லாப் பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும் என்ற நிலை தேவையில்லாத செலவுகளையே ஏற்படுத்தும் எனப் பலரும் சொல்லி வருகிறார்கள்.
இரண்டு மாதம் தான்
அப்படி தான் இங்கு டெக் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இளைஞர், இரண்டே மாதத்தில் இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளில் லட்சக் கணக்கில் செலவிட்டுள்ளார். Aceternity UI என்ற நிறுவனத்தை நடத்த வரும் மனு அரோரா என்பவர் தான் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் புலம்பியிருக்கிறார்.
அவர் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பிளிங்க்இட் தளத்தில் ₹4 லட்சத்திற்கு பொருட்களைச் செய்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.. அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கடந்த இரு மாதத்தில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்பதைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ரூ.4.6 லட்சம் செலவு
அதில் அவர் கடந்த 60 நாட்களில் Blinkit-ல் ₹4.64 லட்சம் செலவழித்துள்ளதைக் காட்டுகிறது. அதில் அக்டோபர் மாதம் அவர் ரூ.1.47 லட்சத்திற்குப் பொருட்களை ஆர்டர் போட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அதை விட மோசமாக ₹3.17 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் போட்டுள்ளார். பிளிங்இட்டை இதனால் தான் நான் வெறுக்கிறேன் எனச் சொல்லி அவர் இதைப் பகிர்ந்துள்ளார்.
இந்த ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். நெட்டிசன் ஒருவர், "அப்படி ரூ.3 லட்சத்திற்கு என்ன தான் ஆர்டர் செய்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு மனு அரோரா, "இவ்வளவு பணத்தை நான் செலவழித்தது முட்டாள்தனம். நான் இதற்கு ஒரு அடிமையாகிவிட்டேன் என்று நினைக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
தொடரும் சிக்கல்
இது இணையத்தில் டிரெண்டான நிலையில், மற்றொரு நபரும் தனது இன்ஸ்டன்ட் டெலிவரி குறித்த ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மாதந்தோறும் சராசரியாக ₹3 லட்சம் செலவிடுவதாகவும், அக்டோபரில் மட்டும் ₹6 லட்சம் செலவிட்டுள்ளது தெரிகிறது. இன்ஸ்டன்ட் டெலிவரி வந்த பிறகு திட்டமிடாத செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் மிகப் பெரிய கடன் வலையில் சிக்கும் ஆபத்தும் இருப்பதாக எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications