இருளில் மூழ்கிய ஜம்மு.. விடாமல் கேட்கும் குண்டு சத்தம்.. பாகிஸ்தான் டிரோன்களை நொறுக்கும் இந்தியா!
ஜம்மு: ஜம்மு நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. "நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாமல் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன" என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்றுள்ள நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையிலும் ஜம்மு காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டன.
இந்நிலையில் இரவு நேரத்திலும் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் தாக்குதலை நடத்தி வருகிறத். ஜம்மு காஷ்மீரின் ஹண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்புவாரா, பூஞ்ச், நவ்காம், உரி ஆகிய 4 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இரவு 7 மணி முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். பாகிஸ்தானின் டிரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டிரோன்களை குறி பார்த்து சுட்டு வீழ்துகிறது இந்திய ராணுவம்.
3வது நாளாக இந்திய வான்வெளிக்குள் டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் ஏவுகிறது. பெரோஜ்பூர் எல்லைக்கு அப்பால் இருந்தும் டிரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் டிரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லை மாநிலங்களிலும் பல ஊர்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பார்மரிலும் விமான தாக்குதலுக்கான சைரனை ஒலிக்க விட்டு எச்சரிக்கை விட்டுள்ளது. எல்லையோர ஊர்களில் மருந்து கடைகள் தவிர ஏனைய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
"நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாமல் குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன" என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், "ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள் என்னவென்றால், அடுத்த சில மணி நேரங்களுக்கு தெருக்களில் செல்வதை தவிர்த்து, வீட்டிலேயே அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணியுங்கள். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம், இதை நாம் அனைவரும் இணைந்து ஒன்றாகக் கடந்து செல்வோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications