தமிழக மாணவர்களுக்கு.. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஏன்? தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி
டெல்லி: தமிழ்நாட்டில் போதுமான தேர்வு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்போது, தமிழக மாணவர்களுக்கு எதற்காக வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்? என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான Swayam (ஸ்வயம்) தேர்வு மையங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் உள்ள மையங்களையே தேர்வு செய்திருந்தபோதிலும், அவர்களுக்குத் தேர்வெழுத கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். இந்த அறிவிப்பால் அண்டை மாநிலங்களுக்குப் பயணம் செய்தல், அங்கே தங்குமிடம் மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகளைச் சமாளிப்பது என்பது அவர்களுக்கு மிகக் கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. தேர்வுக்குத் தயாராக வேண்டிய நேரத்தில், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு கடும் உளவியல் அழுத்தத்தை கொடுக்கிறது.
தமிழ்நாட்டில் போதுமான தேர்வு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் நிலையில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியது நியாயமற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தும் தேர்வுகளில் இதுபோன்ற பிராந்திய ரீதியான திட்டமிடல் இல்லாததால் மீண்டும் மீண்டும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய தொடர்ச்சியான தவறுகள், தேசியத் தேர்வு முகமையின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. வளரும் மாணவர்களுக்கு எதிரானதாகவும் உள்ளது.
தேர்வுத் தேதி நெருங்கிவிட்டதால், தேசியத் தேர்வுகள் முகமைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து, பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி தமிழ்நாட்டிற்குள் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications