வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 17 சதவிகித ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்! மாஸ் காட்டிய மத்திய அரசு
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டிருக்கிறது.

இந்த ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஊதிய உயர்வு காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.8,284 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல மற்றொரு பிரதான கோரிக்கையான வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்பதையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்திருக்கிறது. வங்கிகளின் மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம் தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியான பிறகு இது அமலாகும் என்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "8088 புள்ளிகளுடன் தொடர்புடைய அகவிலைப்படி மற்றும் கூடுதல் விகிதங்களை இணைத்து புதிய ஊதிய விகிதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஊதிய தீர்வின்படி, அனைத்து பெண் ஊழியர்களும் மருத்துவச் சான்றிதழ் வழங்காமல் மாதத்திற்கு ஒரு நாள் மருத்துவ விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50% ஆக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இன்று வங்கி ஊழியர்களுக்கான நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கிறது மத்திய அரசின் தேர்தல் நடவடிக்கையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications