பிரான்ஸில் இருந்து எண்ட் டூ எண்ட் பயணம்.. மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இரவு இந்தியா வருகை!
டெல்லி: பிரான்ஸில் இருந்து நான்காவது கட்டமாக 3 ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியாவை வந்தடைகின்றன.
இடையில் எங்கும் நிற்காமல் எண்ட் டூ எண்ட் பயணம் மேற்கொள்ளும் 3 ரஃபேல் போர் விமானங்களும் இன்று இரவு 7 மணிக்கு குஜராத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமையை பறைசாற்றும் ரஃபேல் விமானங்கள்
இந்தியாவின் விமானப் படையை வலுப்படுத்துவதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் 10 விமானங்கள் முதலில் தயாரானது. இதில் 5 விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. பின்னர் இந்த ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன.

3 விமானங்கள் இன்று இந்தியா வருகை
இரண்டாவது கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் 3 ம் தேதி மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தன. மூன்றாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தன. இந்த நிலையில் நான்காவது கட்டமாக 3 3 ரஃபேல் விமானங்கள் இன்று இரவு இந்தியாவை வந்தடைகின்றன.

நடுவானில் எரிபொருள் நிரப்பப்படும்
இந்த 3 ரஃபேல் போர் விமானங்களும் பிரான்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டு இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த ரஃபேல் விமானங்கள் இடையில் எந்த இடத்திலும் தரை இறங்காது. சவுதி அரேபிய வான்வெளிப் பகுதியில் வரும்போது அந்நாட்டு விமானப் படையின் ஏர்பஸ் 330 விமான உதவியுடன் நடுவானில் 3 ரஃபேல் போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்படும்.

எண்ட் டூ எண்ட் பயணம்
எண்ட் டூ எண்ட் பயணம் மேற்கொள்ளும் 3 ரஃபேல் போர் விமானங்களும் இன்று இரவு 7 மணிக்கு குஜராத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இந்த விமானங்கள் அம்பாலா விமானப் படைத்தளத்தில் உள்ள கோல்டன் ஆரோஸ் பிரிவில் சேர்க்கப்படும். இதன்மூலம் இந்திய விமானப் படையில் உள்ள ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர உள்ளது.












Click it and Unblock the Notifications