பிரான்ஸில் இருந்து எண்ட் டூ எண்ட் பயணம்.. மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இரவு இந்தியா வருகை!
டெல்லி: பிரான்ஸில் இருந்து நான்காவது கட்டமாக 3 ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியாவை வந்தடைகின்றன.
இடையில் எங்கும் நிற்காமல் எண்ட் டூ எண்ட் பயணம் மேற்கொள்ளும் 3 ரஃபேல் போர் விமானங்களும் இன்று இரவு 7 மணிக்கு குஜராத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமையை பறைசாற்றும் ரஃபேல் விமானங்கள்
இந்தியாவின் விமானப் படையை வலுப்படுத்துவதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் 10 விமானங்கள் முதலில் தயாரானது. இதில் 5 விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. பின்னர் இந்த ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன.
3 விமானங்கள் இன்று இந்தியா வருகை
இரண்டாவது கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் 3 ம் தேதி மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தன. மூன்றாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தன. இந்த நிலையில் நான்காவது கட்டமாக 3 3 ரஃபேல் விமானங்கள் இன்று இரவு இந்தியாவை வந்தடைகின்றன.
நடுவானில் எரிபொருள் நிரப்பப்படும்
இந்த 3 ரஃபேல் போர் விமானங்களும் பிரான்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டு இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த ரஃபேல் விமானங்கள் இடையில் எந்த இடத்திலும் தரை இறங்காது. சவுதி அரேபிய வான்வெளிப் பகுதியில் வரும்போது அந்நாட்டு விமானப் படையின் ஏர்பஸ் 330 விமான உதவியுடன் நடுவானில் 3 ரஃபேல் போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்படும்.
எண்ட் டூ எண்ட் பயணம்
எண்ட் டூ எண்ட் பயணம் மேற்கொள்ளும் 3 ரஃபேல் போர் விமானங்களும் இன்று இரவு 7 மணிக்கு குஜராத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இந்த விமானங்கள் அம்பாலா விமானப் படைத்தளத்தில் உள்ள கோல்டன் ஆரோஸ் பிரிவில் சேர்க்கப்படும். இதன்மூலம் இந்திய விமானப் படையில் உள்ள ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர உள்ளது.