தலித், பழங்குடி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர்.. உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிராகரித்த மத்திய அரசு?
டெல்லி: பட்டியலின பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், இதுதொடர்பாக நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூடத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அஸ்வினி வைஷ்னவ் இது தொடர்பகா விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு, தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில் 3% உள் இடஒதுக்கீடு வழங்கினார் முதல்வராக இருந்த கருணாநிதி. ஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தலித், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டை உள் இடஒதுக்கீடு மூலம் ஒரு பிரிவினருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இந்த வழக்குகளில் சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியது. தலித்- பழங்குடிகளின் இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில், 4 நீதிபதிகள் பட்டியலின (எஸ்சி), பழங்குடி (எஸ்டி) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்தனர். இந்த கருத்து விவாதப் பொருளாகி இருக்கிறது.
மோடியுடன் ஆலோசனை: இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜகவை சேர்ந்த எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது.
அமச்சர் விளக்கம்: இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், எஸ்.சி/எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அரசியலைமைப்பின் படியே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின பழங்குடியின சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை இல்லை. எஸ்சி-எஸ்டி இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருக்க வேண்டும்" என்றார்.
100 எம்பிக்கள் சந்திப்பு: முன்னதாக பிரதமர் மோடியை பாஜகவை சேர்ந்த எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் குழு சந்தித்தது. பின்னர் இது தொடர்பாக பாஜக எம்பி சிக்கந்தர் குமார் கூறியதாவது:- உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்ந்த 100 எம்பிக்கள் பிரதமரை சந்தித்து பேசினோம். எங்களது கருத்துகள், கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மோடி உறுதி அளித்தார்" என்றார்.
அமல்படுத்தக்கூடாது: மற்றொரு பாஜக எம்பி, பாகன் சிங் குலஸ்தே கூறுகையில், "பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம். எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயரை அமல்படுத்தக்கூடாது என்ற எங்களது கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு இருக்கிறார்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications