IND - EU பொருளாதார வழித்தடம்.. ஜி20 மாநாட்டில் மோடி அறிவித்த மேஜர் திட்டம்.. பாராட்டிய ஜோ பைடன்
டெல்லி: ஜி 20 மாநாட்டில் இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பிய யூனியனை இணைக்கும் வகையில் பொருளாதார வழித்தட திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. ஜி 20 உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு ஜி 20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியா ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. நடப்பு ஆண்டில் இந்தியா ஜி 20 மாநாட்டுக்கு தலைமை ஏற்றுள்ளது. இதன்படி, தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாட்டினை இந்திய அரசு செய்தது.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் மாநாட்டுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் இன்று தொடங்கிய ஜி 20 மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மிக முக்கியமாக பொருளாதார வழித்தட திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. ஜி 20 மாநாட்டில் இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பிய யூனியனை இணைக்கும் வகையில் பொருளாதார வழித்தட திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த பொருளாதார வழித்தட திட்டத்தின்படி மத்திய கிழக்கு நாடுகளை ரயில்வே மூலமாகவும் இந்தியாவை கப்பல் வழித்தடம் மூலமாகவும் பிறகு ஐரோப்பிய யூனியனை இணைக்கும் வகையிலும் இந்த வழித்தட திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வர்த்தகம், டிஜிட்டல் கம்யூனிகேஷன் வர்த்தகம், ஆகியவற்றை சீராக செயல்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும்.
இந்த நாடுகளின் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என அமெரிக்க இணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பைனர் தெரிவித்தார். இந்த பொருளாதார வழித்தட திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து ஜி 20 உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது உண்மையிலேயே மிகச்சிறந்த திட்டம். பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஜி 20 மாநாட்டில் ஒரே குடும்பம், ஒரே உலகம் கருப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிலையான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
பொருளாதார வழித்தடம் என்ற திட்டத்தை இனி அடிக்கடி கேட்க இருக்கிறீர்கள். குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் குறைகளை பூர்த்தி செய்ய உழைக்கும் போது முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் அமெரிக்கா நட்பு நாடுகளுடன் இணைந்து அறிவித்தது.












Click it and Unblock the Notifications