உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை.. ஆளுநர் - ஜனாதிபதிக்கு காலக்கெடு வழக்கில் மத்திய அரசு பதில் மனு
டெல்லி: ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதா ஒப்புதலுக்கு ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். இது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மசோதா ஒப்புதலுக்கு ஆளுநர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிப்பது என்பது அரசியலமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு விசாரித்து சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

அதோடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு கால நிர்ணயம் செய்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143(1)ன்படி வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார். மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றத்தால் காலநிர்ணயம் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் உள்ளிட்டவர்கள் விசாரித்து வருகின்றனர்.
அப்போது மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதி முதல் விசாரிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. மேலும் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அட்டர்னி ஜெனரல் மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்களை நீதிமன்றம் கேட்கும்.
அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் வாதங்களை ஆகஸ்ட் 28, செப்டம்பர் 2, 3 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் நீதிமன்றங்கள் கேட்கும். தேவை என்றால் செப்டம்பர் 10ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‛‛அரசியலமைப்பின் 142வது பிரிவில் extraordinary powers vested-ல் உச்சநீதிமன்றத்தால் அரசியலமைப்பை திருத்தவோ அல்லது அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கத்தை வீழ்த்துவது தொடர்பான அம்சம் இல்லை. ஒப்புதல் செயல்முறையில் சில வரையறுக்கப்பட்ட சிக்கல்கள் இருக்கலாம் என்றாலும் ஆளுநர் எனும் உயர் பதவியை ஒரு துணை பதவி போல் குறைப்பதை நியாயப்படுத்த முடியாது. இதனால் இந்த காலக்கெடு ஆளுநர், ஜனாதிபதியின் அதிகாரங்களை அபகரிப்பதற்கான அம்சமாக இருக்கும். ஆளுநர், ஜனாதிபதி என்பது அரசியல் ரீதியாக முழுமையான செயல்பாட்டை கொண்டவை. ஜனநாயக நிர்வாகத்தின் உயர்ந்த லட்சியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பாகும்.
எனவே ஆளுநர், ஜனாதிபதி ஆகியோர் மசோதா ஒப்புதல் வழங்குவதற்கு காலக்கெடு விதிப்பது என்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த காலக்கெடு அதிகார சமன்பாட்டை சீர்க்குலைக்கும். மசோதா ஒப்புதல் விவகாரத்தை அரசியல் தலையீட்டின் படி தீர்க்க வேண்டும். நீதிமன்ற தலையீட்டின்படி தீர்க்க கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மசோதா ஒப்புதலுக்கு ஆளுநர் - ஜனாதிபதிக்கு காலக்கெடுவை விதித்ததற்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications