“இது 1000 வருட பிரச்சனை.. இந்தியா பாகிஸ்தான் சரி செய்துகொள்ளும்”.. பஹல்காம் தாக்குதல் பற்றி டிரம்ப்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 பேரை கொன்ற கொடிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் தொடர்ந்து வெடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் "ஏதோ ஒரு வழியில் இதை சரிசெய்யும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
ரோம் செல்லும் வழியில் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக இருக்கிறேன். எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. இரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்." என்றார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை தொடர்பு கொள்வாரா என்பதை உறுதிப்படுத்த மறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "ஆயிரம் ஆண்டுகளாக காஷ்மீர் போராட்டத்தைக் கொண்டுள்ளது. எல்லை பதட்டத்தை சரிசெய்வதற்கான வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புகிறேன். காஷ்மீர் எல்லையில் 1,500 ஆண்டுகளாக பதற்றம் உள்ளது, அவர்கள் அதை எப்படியாவது சரிசெய்வார்கள் என்று நான் நம்புகிறேன். இரு நாட்டுத் தலைவர்களையும் நான் அறிவேன்" என்று கூறி உள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள ஒரு சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்தியா, 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற கெடு விதித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னார் பாசிபோரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், இராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர்களில் ஒருவரான அல்தாப் லல்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்ததாகவும் ஒயிட் நைட் கார்ப்ஸ் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications