அடங்க மறுக்கும் கொரோனா: இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் நன்கொடை!
டெல்லி: இந்தியாவின் நிலவும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு டுவிட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு 15 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,66,317 புதிய பாதிப்பும், 3,747 உயிரிழப்புகளும் பதிவாயின.
இந்தியாவின் நிலைமையை புரிந்து கொண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.

15 மில்லியன் டாலர் நிதி உதவி
இந்த நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களில் முன்னோடியாக விளங்கும் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் பேட்ரிக் டோர்சி கூறுகையில், ' இந்த தொகையானது கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

வென்டிலேட்டர்கள் விநியோகிக்கப்படும்
இதில் கேர்-க்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா ஆகியவற்றுக்கு தலா 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. சேவா இன்டர்நேஷனல் ஒரு இந்து நம்பிக்கை அடிப்படையிலான, மனிதாபிமான, இலாப நோக்கற்ற சேவை அமைப்பாகும். டுவிட்டர் வழங்கிய நிவாரண தொகை மூலம் இந்தியாவின் அரசு மருத்துவமனைகள் மற்றும் கோவிட் -19 பராமரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் விநியோகிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால பொருட்கள் வழங்கப்படும்
கேர்(CARE) என்பது உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடும் ஒரு முன்னணி மனிதாபிமான அமைப்பாகும். தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை அமைப்பதன் மூலம் அரசின் முயற்சிகளுக்கு கூடுதலாக நிதி பயன்படுத்தப்படும்; முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு ஆக்ஸிஜன், பிபிஇ கருவிகள் மற்றும் முக்கியமான தேவைப்படும் அவசரகால பொருட்களை வழங்குதல் உறுதி செய்யப்படும் என்று கேர் அமைப்பு கூறியுள்ளது.

சிகிச்சை மையம் வலுப்படும்
அசோசியேஷன் ஃபார் இந்தியாவின் மேம்பாடு (எய்ட்) என்பது ஒரு தன்னார்வ இயக்கமாகும், இது நிலையான, சமமான மற்றும் நியாயமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எய்ட்-க்கு வழங்கப்படும் இந்த நிவாரண தொகையானது கொரோன பரவுவதைத் தடுக்கவும், கொரோனா பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையங்களை வலுப்படுத்தவும் ஆக்ஸிஜன், ஆக்சிமீட்டர்கள், தெர்மோமீட்டர்கள், பாதுகாப்பு கியர் மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி புரியும் என்று டுவிட்டர் தனது அறிக்கையில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications