தலைநகரை தகர்க்கும் சதி முறியடிப்பு.. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் அதிரடி கைது.. பகீர் தகவல்!
டெல்லி: டெல்லியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட சதி திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என சந்தேகப்படக்கூடிய இருவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
டெல்லியின் சாரே காலேகான் பகுதியில் கைது செய்யப்பட்ட தீவிராவதிகள் இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைநகர் டெல்லியை குறிவைத்து தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டுவதும் அதை போலீசார் முறியடிப்பதும் அண்மைக்காலமாக தொடர் கதையாக உள்ளது.
சதி திட்டம் முறியடிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் டெல்லியில் தாக்குதல் நடத்த தீட்டியிருந்த சதித்திட்டத்தையும் போலீஸார் முறியடித்தனர். தவுலா குவான் பகுதியில் ஒருவரிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் 15 கிலோவை போலீஸார் பறிமுதல் செய்திருந்தார்கள்,.
டெல்லியில் சிக்கினர்
இந்நிலையில் டெல்லியின் சாரே காலேகான் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என சந்தேகப்படக்கூடியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் கூறும் போது " டெல்லியின் சாரே காலே கான் பகுதியில் உள்ள மில்லினியம் பார்க் அருகே இரண்டு பேர் சந்கேத்திற்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்தனர், இதையடுத்து அங்கு ரோந்தில் இருந்த போலீஸாரை அனுப்பி இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினோம்.
துப்பாக்கி பறிமுதல்
அவர்கள் ஜம்மு காஷ்மீர் , பாரமுல்லா மாவட்டம், பாலா மொஹல்லா பகுதியைச் சேர்ந்த சனானுல்லா மகன் அப்துல் லத்தீப் மிர் என்பதும், மற்றொருவர் குப்வாரா மாவட்டம், ஹத் முல்லா கிராமத்தைச் சேர்ந்த பசீர் அகமதுவின் மகன் முகமது அஷ்ரப் கதானா என்பதும் தெரியவந்தது. அவர்களைச் சோதனையிட்டபோது அவர்களிடம் 2 கைத் துப்பாக்கிகளும், 10 தோட்டாக்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நேபாளம் வழியாக தப்பிக்க முடிவு
முதல்கட்ட விசாரணையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் தாக்குதல் நடத்திவிட்டு, இருவரும் நேபாளம் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் செல்லத் திட்டமிட்டிருந்தனர், அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது" என்று துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் கூறினார்.