நாகரீகமற்றவர்களா? 100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயார்.. மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் பேச்சு
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியிருந்த நிலையில், இன்று யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால், அதற்காக 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என மாநிலங்களவையில் பேசியிருக்கிறார் தர்மேந்திர பிரதான்.
2025 - 2026 பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கிய நிலையில், திமுக எம்பிக்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசினர். குறிப்பாக கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்காது என பேசினர்.

தொடர்ந்து அதற்கு பதில் அளித்து பேசிய தர்மேந்திர பிரதான்,"தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அம்மாநில அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். அம்மாநில மக்களுக்கும் அவர்கள் நியாயமானவர்களாக இல்லை" என்றார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை மன்னர் போல எண்ணிக் கொண்டு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்துடன் பேசுவதாகவும், அவருக்கு நாவடக்கம் வேண்டும் என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து தனது கருத்தை திரும்பப்பெற்ற தர்மேந்திர பிரதான்,"என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதனை தான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என பேசி இருந்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களையும் தமிழக மக்களையும் அவமதித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகரிடம் திமுக எம்பி கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், தனது பேச்சுக்கு 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என பேசி இருக்கிறார் தர்மேந்திர பிரதான். மாநிலங்களவையில் தேசிய கல்விக் கொள்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தர்மேந்திர பிரதான் பேசுகையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடந்து பேசிய அவர்,"நான் பேசியது யாரின் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்க முயலவில்லை. பிரதமர் மோடி அரசு தமிழுக்கு எதிரானது இல்லை. தமிழை நானும் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிப்போர் குறைந்து வருகிறார்கள். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்தை இங்கே நான் பகிர விரும்புகிறேன். ஆந்திரத்தில் 10 மொழிகளை ஊக்கப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்" என பேசினார்.












Click it and Unblock the Notifications